சோதனையின் போது பெட்டி பெட்டியாக சிக்கிய விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள்… எங்கு தெரியுமா?


பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் நிறுவனங்களில் நடத்திய சோதனையில் பெட்டி, பெட்டியாக விலை உயர்ந்த கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.11,500 கோடி வங்கி பணத்தை மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதில், சி.பி.ஐ., அமலாக்க பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி பொருட்கள் முடக்கப்பட்டுள்ளன.

அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர். நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.


அதன்படி நேற்று ரூ.94 கோடி சொத்துக்கள முடக்கப்பட்டது. 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். நிரவ் மோடியின் 17 நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதில் சிக்கும் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. அதன்படி இன்று ரூ.44 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. அதில் ரூ.30 கோடி வங்கி முதலீடு ஆகும். ரூ.13 கோடி பங்கு பத்திரங்களில் செய்யப்பட்ட முதலீடு.

இதுபோல் நிரவ் மோடி நிறுவனத்தில் இருந்து ஏராளமான விலை உயர்ந்த கைக்கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை பல்வேறு பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன.

176 இரும்பு பீரோ, 158 பெட்டிகள், 60 கண்டெய்னர்கள் ஆகியவற்றிலும் ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. அவற்றையும் கைப்பற்றி இருக்கிறார்கள். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!