எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து மீது காவல் நிலையத்தில் ஜோதிடர்கள் புகார்!

ஜோதிடர்கள் குறித்து தரக்குறைவாக பேசியதாக நடிகர் மாரிமுத்து மீது காவல் நிலையத்தில் ஜோதிடர்கள் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் குறித்து தரக்குறைவாக பேசியதாக நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து மீது 30-க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிடம் குறித்த ஒரு விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து ஜோதிடர்களிடம் நேரடியான வாக்குவாதத்தில் ஈடுபட்டு பல கேள்விகளை கேட்டார். அப்போது ஜோதிடர்களை ஒருமையில் பேசியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த ஜோதிடர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாரிமுத்துவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஜோதிடர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில்,

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தங்களை தரக்குறைவாகவும், ஒருமையிலும், மரியாதை குறைவாகவும் பேசிய மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மனு கொடுத்தனர்.

மனுவை இன்ஸ்பெக்டர் மகேந்திரன் பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து ஜோதிடர்கள் கலைந்து சென்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!