இலவசத்தை இனியாவது தவிர்த்திடுங்கள்… சரத்குமார் வேதனை!

வேலூர் காட்பாடியில் ஆஸ்கார் தியேட்டர் எதிரில் தம்பி பிரியாணி கடை திறக்கப்பட்டது. அதன் துவக்க விழா சலுகையாக ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம், ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் மேலும் ஒரு சிக்கன் பிரியாணி இலவச என அறிவித்தனர்.

இதனால் ஏராளமான பொதுமக்கள் கடை முன்பு திரண்டனர். கடையிலிருந்து வரிசையாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் காத்திருந்து பிரியாணி வாங்கிச் சென்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. அப்போது, அந்த வழியாகவந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தலின் படி போலீசாரால் கூட்டம் கலைக்கப்பட்டு பிரியாணி கடை மூடப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ” வேலூர், காட்பாடியில் ‘தம்பி பிரியாணி’ என்ற பிரியாணி கடை புதிதாக திறக்கப்பட்டு மட்டன் பிரியாணி வாங்கினால் சிக்கன் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்ததால், அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதி, நீண்ட வரிசையில் வெயிலில் வெகுநேரமாக காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

புதிய கடைகள் திறப்பின் போது சலுகைகள் வழங்குவது வழக்கம் . ஆனால், பிரியாணி இலவசம் என்பதற்காக காட்பாடி முதல் வேலூர் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் அளவிற்கு மகள் கூட்டம் அலைமோதியது என்றால் மக்களின் இலவச மோகத்தை சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.

கூட்டத்தை கண்ட வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சியில் தொழில் உரிமம் பெறாமல் துவங்கப்பட்டதாக தெரிவித்து கடையை மூடச் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதே சமயம் பொதுமக்களை வலுக்கட்டாயமாக கலைந்து செல்லச் செய்யும் சூழல் காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால் மக்களின் மனநிலை, இலவசத்தின் மீதான ஆர்வம், கலெக்டர் வருகை புரிந்து கூட்டத்தை கலைந்து செல்ல கடையை மூட முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அனைத்தும் தலைகுனிவான செயல்.

கடை உரிமம் பெற்று திறக்கப்பட்டதா? பிரியாணி சுவையானதாக இருக்குமா? சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்றெல்லாம் பாராமல் நீண்ட வரிசையில் தயங்காமல் காத்திருந்து பெறலாம் என்றால் அந்த இலவசத்தில் இருக்கும் மோகம் என்ன?

பொதுமக்கள் என்னிடம் கேட்கலாம், உங்களுக்கென்ன வசதியுடன் வாழ்கிறீர்கள். இலவசம் உங்களுக்கு தேவையல்ல, எங்களின் தேவை என்று கூறலாம். ஆனால் அப்படியல்ல.

தன்மானத்தை இழந்து கிடைக்கும் இலவசம் பெறுவது சரியல்ல. நாம் உழைத்து கடின உழைப்பால், முயற்சியால் ஈட்டுகின்ற பொருளைக்கொண்டு உண்ணுகின்ற உணவுதான் சிறப்பு என்று சிந்திப்பவன் என்பதால் நான் இதனை தெரிவிக்கிறேன்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு அரசு நலத்திட்டப்பணிகள் வாயிலாக தேவைகள் பூர்த்தி அடையும். ஆனால், அனைவரும் இலவசத்திற்காக இப்படி நின்றதை பார்த்து பெரும் தலைகுனிவாக எண்ணி வருந்துகிறேன்.

தன்மானத்தை இழந்து, சுயமரியாதை விடுத்து கிடைக்கும் அத்தியாவசியமற்ற இலவசத்தை இனியாவது தவிர்த்திடுங்கள்” என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!