ரஷியாவின் பெண் பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர் மீது கொடூர தாக்குதல்..!

நொவாயா கெசெட்டா எனப்படும் செய்தித்தாளில் பிரபல பத்திரிகையாளராக பணிபுருந்து வருபவர் எலெனா மிலாஷினா.

இவர் அலெக்சாண்டர் நெமோவ் என்ற வழக்கறிஞருடன் உள்ளூர் விமான நிலையத்திலிருந்து செச்சென் தலைநகர் குரோஸ்னிக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தார்.

அப்போது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் அவர்கள் சென்றுகொண்டிருந்த காரை நிறுத்தினர். பின்னர் மிருகத்தனமாக அவர்களை தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேல் சிகிச்சைக்காக மாஸ்கோவிற்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ரஷிய அரசாங்கம் கூறுகையில், இது ஒரு தீவிரமான தாக்குதல் , இந்த தாக்குதல் குறித்து ரஷிய அதிபர் புதினுக்கு விளக்கமளிக்கப்படும் என்று கூறியிருக்கிறது.

சம்பவம் குறித்து மாஸ்கோவில் உள்ள சில ரஷிய அரசியல்வாதிகள் இத்தாக்குதலைக் கண்டித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது வெளியிடப்பட்டிருக்கும் அவரது புகைப்படத்தில் அவர் படுக்கையில் அமர்ந்திருப்பதும், அவர் முகம் முழுவதும் தாக்குதல்காரர்கள் வீசிய பச்சை சாயத்தையும் காண முடிகிறது. அவரது தலையை தாக்கியவர்கள், அவர் தலையை மொட்டையடித்திருக்கின்றனர்.

அவரது கையில் கட்டுகள் உள்ளன. அவரது விரல்கள் பல உடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மிலாஷினா, செச்செனிய மனித உரிமை அதிகாரியான மன்சூர் சோல்டயேவிடம் இது திட்டமிட்ட உறுதியான தாக்குதல் என்று குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்து செய்திகள் தெரிவிப்பதாவது:- இதில் ஈடுபட்டது ரஷியாவில் தடைசெய்யப்பட்ட மெமோரியல் எனும் ஒரு உரிமை குழு ஆகும்.

மிலாஷினா மற்றும் நெமோவ் ஆகியோரின் முகத்தில் கொடூரமாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமில்லாமல், அவர்களது உபகரணங்களையும் அபகரித்து, அவற்றை அடித்து நொறுக்கியிருக்கிறது.

அதன் பின்னர் இங்கிருந்து வெளியேறுங்கள் எனவும் இனி எதுவும் எழுத வேண்டாம் என்றும் அவர்களை எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு செய்திகள் தெரிவிக்கின்றன. முன்பே அவரது உயிருக்கு பல அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!