ஜாதகம் பார்த்துவிட்டு சென்ற தந்தை, மகனுக்கு நடந்த சோகம்!

மோட்டார்சைக்கிளில் முந்திச்செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் லாரி சக்கரம் ஏறி ஜாதகம் பார்த்துவிட்டு சென்ற தந்தை, மகன் பலியானார்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீதாராம்பாளையம் சக்திவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 67). இவருடைய மகன் தனசேகர் (34). 2 பேரும் தச்சு தொழிலாளர்கள். தனசேகரனுக்கு திருமணம் ஆகவில்லை.

எனவே திருமணம் சம்பந்தமாக ஜோதிடரை பார்ப்பதற்காக ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அங்கு ஜாதகம் பார்த்துவிட்டு மீண்டும் திருச்செங்கோட்டுக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி சென்றனர். மோட்டார்சைக்கிளை தனசேகர் ஓட்டினார். பின்னால் ஞானப்பிரகாசம் உட்கார்ந்திருந்தார்.

பவானியை அடுத்த லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலம் அருகே சென்றபோது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை தனசேகர் முந்தி செல்ல முயன்றார்.

உடல் நசுங்கி பலி அப்போது கன்டெய்னர் லாரியும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக உரசிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தனசேகர், ஞானப்பிரகாசத்தின் மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தனசேகர், ஞானப்பிரகாசம் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து காரணமாக கோவை- தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரியின் டிரைவரான கேரளாவை சேர்ந்த ஹக்கீம் (47) என்பவரை கைது செய்தனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!