மொட்டை மாடியில் 2 வேன்களை பார்க்கிங் செய்த நபர்… ஏன் தெரியுமா..?

தைவான் நாட்டில் குடியிருப்பின் வாசல் பகுதியில் வேனை நிறுத்தியதற்காக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தன்னுடைய வீட்டின் குறுகலான மொட்டை மாடியில் தனது 2 வேன்களை பார்க்கிங் செய்திருக்கிறார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப்பார்த்த பயனர்கள், ஏன் மொட்டை மாடியில் வேன்களை நிறுத்தி உள்ளீர்கள்? எப்படி வேன்களை மொட்டை மாடிக்கு கொண்டு சென்றீர்கள்? என கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

அதற்கு, தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் விரக்தியில் இவ்வாறு செய்ததாக கூறிய அவர், கிரேனை வாடகைக்கு எடுத்து அதன்மூலமாக 2 வேன்களையும் மொட்டை மாடியில் நிறுத்தியதாகவும் கூறி உள்ளார்.

இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், அதிகாரிகள் அவரிடம் சென்று மாடியில் இருந்து வேன்களை இறக்கும்படி கூறினர். ஆனால் அவர், இந்த கட்டிடம் ஸ்டீல் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்டது. எனவே 2 வாகனங்களின் எடையை தாங்கும் என்பதால் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!