நீர்மூழ்கி கப்பல் விபத்தில் பலியான கோடீஸ்வரரின் சகோதரி உருக்கம்!

கடலில் மூழ்கிய “டைட்டானிக்” கப்பல் பாகங்களை காண்பதற்காக சமீபத்தில், “ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ்” எனும் ஆழ்கடல் சுற்றுலா நிறுவனத்திற்கு சொந்தமான “டைட்டன்” என்ற நீர்மூழ்கிக்கப்பலில் 5 பேர் சென்றனர்.

நான்கு நாட்களுக்கு முன்பு வடக்கு அட்லாண்டிக் கடலில் அது காணாமல் போனது. இதனை கண்டுபிடித்து பயணித்தவர்களை உயிருடன் மீட்பதற்கு ஒரு பன்னாட்டு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை அமெரிக்க கடலோர காவற்படை முடுக்கி விட்டிருந்தது.

ஆனால் நீண்ட தேடலுக்கு பிறகு அதன் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், அக்கப்பல் வெடித்து சிதறி இருப்பதாகவும் அதில் பயணித்த பாகிஸ்தானைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஷேசாதா தாவூத், அவரது மகன் உள்ளிட்ட 5 பேரும் பலியானதாக அறிவித்தது.

டைட்டானிக் கப்பலில் இருந்து 1,600 அடி (488 மீட்டர்) தொலைவில் ‘டைட்டன்’ நீர்மூழ்கிக் கப்பலின் மீதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.


இச்செய்தி வெளிவந்ததும், மிகுந்த வேதனையோடு கருத்துக்களை வெளியிட்ட பாகிஸ்தான் தொழிலதிபர் ஷேசாதா தாவூத்தின் மூத்த சகோதரி, தான் “முற்றிலும் மனம் உடைந்துவிட்டதாக” கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: ஷேசாதா தாவூத்தின் மகன் சுலேமான் தாவூத், துணிச்சலான இப்பயணத்தைக் கண்டு பயந்தார்.

ஆழ்கடலில் மூழ்கிய “டைட்டானிக்” கப்பலை காண வேண்டும் எனபதில் ஆர்வம் கொண்ட ஷேசாதாவிற்கு இது முக்கியமானதாக இருந்ததால், அவர் மகனான சுலேமான் தாவூத் செல்ல நேர்ந்தது.

உலகம் முழுவதும் இவ்வளவு அதிர்ச்சியையும், இவ்வளவு சஸ்பென்ஸையும் சந்திக்க நேர்ந்தது குறித்து நான் மிகவும் மோசமாக உணர்கிறேன்.

தனிப்பட்ட முறையில் அவர்களை நினைத்து மூச்சு விடுவதே கடினமாக இருந்தது. “ஒரு மில்லியன் டாலர்கள்” அளித்திருந்தாலும், நான் “டைட்டன்” நீர்மூழ்கி கப்பலில் ஏறியிருக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். இறந்தவர்களில் ஷேசாதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் தாவூத்துடன், பிரிட்டிஷ் ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் நிபுணர் பால்-ஹென்றி நர்ஜோலெட் மற்றும் “ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ்” நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் ஸ்டாக்டன் ரஷ் ஆகியோரும் கப்பலில் இருந்தனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!