அகமது நகர் – சிறுமியை கற்பழித்து கொன்ற 3 பேருக்கு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு…!


அகமது நகர் அருகே சிறுமியை கற்பழித்து கொன்ற 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அகமதுநகர் செசன்ஸ் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

சிறுமி

அகமது நகர் மாவட்டம் பார்னர் தாலுகாவில் உள்ளது லோனி மாவலா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி தனியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ் விஷ்ணு லோங்கர் (வயது36), மங்கேஷ் தத்தாராய் லோங்கர் (30), தத்தாராய் ஷிண்டே (27) ஆகிய 3 பேர், அவளை பின் தொடர்ந்து வந்தனர்.

இதை கவனித்து, ஏதோ விபரீதம் நடக்க உள்ளதை உணர்ந்த சிறுமி தனது வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். இருப்பினும் வாலிபர்கள் அவளை விடாமல் துரத்தியபடி வந்தனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வந்தபோது, வாலிபர்கள் 3 பேரும் அவளை பிடித்து மானபங்கம் செய்தனர். மேலும் அவளை தர தரவென இழுத்து சென்று கொடூரமாக கற்பழித்தனர்.

அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சிறுமி உதவிகேட்டு அலறினாள். இதனால் கோபம் அடைந்த அவர்கள், சிறுமியை அங்கு கிடந்த கல்லால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் சிறுமியின் உடலை சகதிக்குள் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

3 பேர் கைது

சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது அகமதுநகர் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வக்கீல் உஜ்வால் நிகாம், சில அரிதினும் அரிதான வழக்குகளை மேற்கோள்காட்டி, இதுபோன்ற வக்கிர எண்ணம் உடையவர்களுக்கு கருணை காட்டினால், மற்றவர்களை கொடூர செயலில் ஈடுபட அவர்களே உத்வேகம் அளிப்பார்கள், ஆகையால் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

தூக்கு தண்டனை

விசாரணை நிறைவு பெற்றதையடுத்து நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி சுவர்ணா கேவலே, சிறுமி ஈவு, இரக்கமற்ற முறையில் கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறாள் என்று கூறியதுடன், குற்றவாளிகள் சந்தோஷ் விஷ்ணு லோங்கர், மங்கேஷ் தத்தாராய் லோங்கர் மற்றும் தத்தாராய் ஷிண்டே ஆகிய 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

இதே அகமதுநகர் மாவட்டம் கோபர்டி கிராமத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14 வயது சிறுமி, 3 பேரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், வருகிற 18-ந் தேதி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூற இருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!