விருந்து செலவை ஏற்றது யார்? வைரலான ஆனந்த் மகிந்திராவின் பதிவு!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் போன்ற பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 233 பில்லியன் டாலராக உள்ளது.

2-வது இடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்.

அவரின் சொத்து மதிப்பு 202 பில்லியன் டாலராக உள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எலான் மஸ்க் அங்கு சென்றிருந்தார்.

அங்கு அவரை பெர்னார்ட் அர்னால்ட் சந்தித்தார். இருவரும் மதிய உணவு விருந்தில் ஒன்றாக பங்கேற்றனர்.

இந்த சந்திப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பி இருந்த நிலையில், மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திராவின் மனைவிக்கு ஒரு வித்தியாசமான சந்தேகம் கிளம்பி உள்ளதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மகிந்திராவின் பதிவில், பெர்னார்ட் அர்னால்டும், எலான் மஸ்கும் சந்தித்து மதிய உணவு அருந்தி இருந்தாலும், இந்த விருந்துக்கான செலவை யார் ஏற்பது என தனது மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த வலைதள பயனர்கள் தங்களது கற்பனை பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!