ஒரே குண்டு… கட்டிப்பிடித்து கொண்டு மனைவியை முதுகில் சுட்டுக்கொன்ற கணவர்!

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள கான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அனிக்பால் (வயது 40). இவரது மனைவி சுமன் பால் (வயது 38). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனிக்பால் விவசாய தொழில் மேற்கொண்டு வந்தார்.

அனிக்பாலுக்கும், சுமன் பாலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் சுமன் பாலின் செல்போன் காணாமல் போய்விட்டது. கணவர்தான் செல்போனை எடுத்து மறைத்து வைத்திருப்பதாக சுமன் பால் சந்தேகப்பட்டார்.

இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதனால் மனைவியை கொலை செய்ய அனிக்பால் திட்ட மிட்டார். இதற்காக அவர் நாட்டுத் துப்பாக்கி ஒன்றை வாங்கி ரகசியமாக வைத்திருந்தார்.

நேற்று முன்தினம் சாமி கும்பிட்டுவிட்டு மனைவி சுமன் பாலிடம் வந்த அனிக்பால் சமரசம் பேசுவது போல நடித்தார். பிறகு மனைவியை கட்டிப்பிடித்து கொண்டு திடீரென அவரது முதுகில் துப்பாக்கியால் சுட்டார்.

சுமன்பாலின் முதுகை துளைத்த குண்டு அவரது உடலை துளைத்தபடி வெளியே வந்தது. அது அனிக்பாலின் வயிற்றுக்குள் பாய்ந்தது. மிக மிக அருகில் இருந்து சுடப்பட்டதால் அந்த ஒரு குண்டு கடுமையான வேகத்தில் கணவன், மனைவி இரண்டு பேரின் உடலையும் துளைத்து ரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தது.

துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிக்பால், சுமன் பால் இருவரையும் மருத்துவ மனைக்கு தூக்கி சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். மனைவியை கொல்வதற்காக அனிக்பால் துப்பாக்கி வாங்கி வந்து ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!