அமைச்சருக்கு பாலாபிஷேகம் செய்த பொதுமக்கள்!

சினிமா நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் படங்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது விசுவாசத்தை பொதுமக்கள் காட்டி வருகின்றனர்.

தெலுங்கானாவில் அமைச்சர் ஒருவரை பாராட்டி பொதுமக்கள் அவருக்கு நேரிலேயே பாலாபிஷேகம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநில தொழிலாளர் நல அமைச்சர் மல்லா ரெட்டி.

இவர் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மகபூப்நகருக்கு சென்றார். அவருடன் கலால் துறை அமைச்சர் சீனிவாஸ் உடன் சென்றார்.

மகபூப் நகரில் உள்ள பி.கே ரெட்டி காலனியில் அமைச்சர்களை வரவேற்க பொதுமக்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


அமைச்சர்கள் வந்து இறங்கியதும் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களை ஒரு நாற்காலியில் அமர வைத்து பொதுமக்கள் வரிசையாக வந்து பாலாபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர் மல்லாரெட்டி தங்கள் பகுதியில் பல்வேறு நல்ல பணிகளை செய்து வருகிறார்.

அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாலாபிஷேகம் செய்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

அபிஷேகத்தை தொடர்ந்து அமைச்சர்கள் வேறு உடை அணிந்து கொண்டனர். இதனையடுத்து விருது வழங்கும் விழா நடந்தது.

அப்போது சினிமா பாடல் ஒன்றுக்கு அமைச்சர் மல்லா ரெட்டி நடனம் ஆடினார். இதனை அங்குள்ள பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

அமைச்சருக்கு பாலாபிஷேகம் செய்வது அவர் நடனமாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பையும் அதிக பார்வையாளர்களையும் கவர்ந்தது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!