தேர்வில் 35% மதிப்பெண்கள் பெற்ற மகனை கொண்டாடி மகிழ்ந்த பெற்றோர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது.

இதில், மும்பையைச் சேர்ந்த பெற்றோர் தங்களது மகன் விஷால் 6 பாடங்களிலும் 35 மதிப்பெண்களைப் பெற்று ஜஸ்ட் பாஸ் ஆனாதை நெகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.

பொதுத்தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உடனே மனமுடைந்து தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவங்களுக்கு மத்தியில், இதுவும் பெரிய விஷயம் தானே என்று ஜஸ்ட் பாஸ் ஆன மகனை பாராட்டிய செயல் பெற்றோர்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர்.

மராத்தி நடுநிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர் எடுத்த 35 சதவீத மதிப்பெண்ணை பெருமையோடு காண்பித்த பெற்றோரின் வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், “மும்பையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் தேர்வில் 35% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், சோகமாகவோ, கோபமாகவோ இருப்பதற்குப் பதிலாக, அவரது பெற்றோர்கள் அவரது வெற்றியைக் கொண்டாடினர்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, “குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதைத்தான் பல பெற்றோர் விரும்புகின்றனர். கொண்டாடுகின்றனர்.

ஆனால், எங்களைப் பொருத்தவரை விஷாலின் 35 சதவீத மதிப்பெண் கூட பெரிய விஷயம்தான்” என மாணவரின் தந்தை நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

பெற்றோரின் மனதைக் கவரும் பதிலைக் கண்டு இணையப் பயனர்கள் இன்ப அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!