பூங்காவில் உள்ள காரில் பயணம் செய்த பெண் மரணம்… பின்ணனியில் அதிர்ச்சித் தகவல்…!


அரியானா மாநிலத்தில் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள கோ-கார்டில் பயணம் செய்த பெண்ணின் தலைமுடி கார் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் பதிண்டா பகுதியைச் சேர்ந்த புனீத் கவுர் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக நேற்று பிஜ்னோரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றார்.

அங்கு இருந்த கோ-கார்ட் எனப்படும் சிறிய அளவிலான காரில் பயணம் செய்ய அனைவரும் முடிவு செய்தனர். புனீத் தனது கணவருடன் ஒரு காரில் பயணித்தார். சிறிது தூரம் சென்ற பிறகு புனீத்தின் தலைமுடி சக்கரத்தில் சிக்கியது.

கார் மிக வேகமாக சென்றதால் அவரால் முடியை எடுக்க முடியவில்லை. அவரின் அலறல் சத்தம் கேட்டு காரை நிறுத்துவதற்குள் புனீத்தின் தலைமுடியுடன் கூடிய தோல் பகுதி தனியாக பெயர்ந்து ரத்தம் கொட்டியது.

படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அந்த பூங்கா உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என புனீத்தின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.

ஹெல்மட் அணிந்திருந்தும் அவர் முடி சக்கரத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய பூங்கா அதிகாரி கூறுகையில், ‘அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்த பிறகே வாடிக்கையாளர்கள் காரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதையும் மீறி இந்த விபத்து நடந்துள்ளது’ என்றார். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!