வங்கக்கடலில் அதி தீவிர புயலாக மாறியது ‘மோக்கா’

வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள ‘மோக்கா’ புயல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.

தொடர்ந்து அந்தமான் அருகில் மையம் கொண்டுள்ள இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து வருகிற 14ம் தேதி காலை அந்த புயல் வங்கதேசத்தில் உள்ள காக்ஸ்பஜா மற்றும் மியான்மர் நாட்டில் உள்ள சிட்வி நகரங்களுக்கு இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரையை கடப்பதற்கு முன்பு அதிதீவிர புயல் சற்று வலு குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாக நிபுணர்கள் கணித்து உள்ளனர். கரையை கடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை துறை எச்சரித்து உள்ளது.

இதன் எதிரொலியால், மேற்கு வங்க மாநிலம் திகாவில் தேசிய பேரிடர் மீட்புப் படை 8 குழுக்களையும், 200 மீட்புப் பணியாளர்களையும் தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2வது பட்டாலியின் குர்மிந்தர் சிங் கூறியுள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!