சொத்துக்காக தந்தையை ஆட்டோ ஏற்றி கொன்ற மகன்..!

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் குயிலாபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி (72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். பெரியசாமி பெயரில் சிறிய வீடு மற்றும் குறைந்த அளவில் விவசாய நிலத்தை சொத்து இருந்துள்ளது.

சொத்தை பிரித்ததில் மூத்த மகன் வெங்கடேசனுக்கு அதிக பங்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆட்டோ ஓட்டுநர்களான மற்ற இரு மகன்களும் தந்தை மீது கோபம் கொண்டனர். மகன்களான ஈஸ்வரன் மற்றும் முருகன் ஆகியோர் அடிக்கடி தந்தையுடன் தகராறு செய்துள்ளனர்.

கடந்த மாதம் 21 ஆம் தேதி ஈஸ்வரனின் தூண்டுதலின் பேரில் இளைய மகன் முருகன் தனது சொந்த ஆட்டோவில் அந்த வழியாகச் சென்ற பெரியசாமி மீது வேகமாக கொலை செய்யும் நோக்கில் ஏற்றினார்.

இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து மூத்த மகன் வெங்கடேசன் கொடுத்த புகாரில் ஆட்டோ ஓட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு மகன் ஈஸ்வரன் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமி நேற்று உயிரிழந்தார். இதனால் அவரது மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்துக்காக தனது சொந்த தந்தையை ஆட்டோ ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dinamaalai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!