நியூயார்க் கோர்ட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி கைது!

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் கோர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016-ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தது. அதனால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.

அதிபர் தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியுடனான பழக்கம் வைரலான நிலையில், அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு-செலவு கணக்கில் சட்டரீதியிலானதாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அந்த கிரிமினல் வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவர் விரைவில் சரண்டர் ஆக உள்ளதாக தகவல் வெளியானது. டொனால்ட் டிரம்ப் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் (டிஏ) அலுவலகத்தில் சரணடைவார் என்று அவரது வழக்கறிஞர் ஜோ டகோபினா தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்காக முன்னாள் அதிபர் டிரம்ப் நியூயார்க் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

அங்கு அவர் சட்டமுறைப்படி கைது செய்யப்பட்டார். அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டது. ஆனால் விலங்கு மாட்டப்படவில்லை.

டொனால்டு டிரம்ப் கோர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!