மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் பிரச்சனைகள்!

மாதவிடாய் சுழற்சி, மகப்பேறு இவற்றை தொடர்ந்து மாதவிடாய் நிறைவு அல்லது மெனோபாஸ் நிலை சராசரியாக 45 வயது முதல் 55 வயது வரை எப்பொழுது வேண்டுமானாலும் நிகழ்கிறது.

இனப்பெருக்க ஹார்மோன்களின் அளவு இயற்கையாகவே வயதிற்கு ஏற்ப குறைகின்ற காரணத்தினால் மெனோபாஸ் ஏற்படுகிறது. இதனால் பெண்கள் உடல் மற்றும் மன அளவில் மாற்றங்களை அடைகின்றனர்.

தென் குறிகுணங்களாக தூக்கமின்மை, மன அழுத்தம், எரிச்சல் உணர்வு, முடி கொட்டுதல், சரும வறட்சி, உடல் சோர்வு, எலும்புகளில் வலி, பிறப்புறுப்பில் வறட்சி போன்றவை ஏற்படலாம்.

இக்காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் அளவு குறையத் தொடங்கும். மேலும் கால்சியம், வைட்டமின் டி போன்ற சத்துக்கள் குறைவதால் அதற்கேற்ப உணவு முறைகளை மாற்றி எடுத்துக்கொள்வது சிறந்தது.

கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களால் ஆன உணவு வகைகளை எடுத்துக்கொள்ளுதல், பிரண்டை, முடக்கற்றான் கீரை, முருங்கை கீரை, உளுந்து, முளைக்கட்டிய தானியங்கள், பால், மோர், கருப்பு கவுனி அரிசி, கைக்குத்தல் அரிசி இவற்றுடன் காய்கறிகள், பழங்கள், அளவான இறைச்சி, மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை தவிர நடைபயிற்சி, பிராணாயாமம், சூரிய நமஸ்காரம் மேலும் சில யோகாசனப் பயிற்சிகளை மருத்துவரின் அறிவுரைப்படி மேற்கொள்வது சிறந்தது. இதனால் உடல் மற்றும் மனநலம் மேம்படும். சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அடிவயிற்று வலி காணப்படும்.

இதனை சூதக வலி என்பர். இதற்கு சோம்பு கஷாயம், தனியா கஷாயம், புதினா துவையல், புதினா சாற்றுடன் தேன் கலந்து அருந்துதல், பெருங்காயத்துடன் வெந்நீர் கலந்து அருந்துதல் போன்றவை சூதகவலியை கட்டுப்படுத்தும்.

சில மகளிருக்கு மெனோபாஸ் எய்திய பிறகும் திடீரென உதிரப்போக்கு தொடங்கும். அவ்வாறு இருப்பின் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

ஏனெனில் இத்தகைய குருதிப்போக்கானது கருப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகக் கூட இருக்கலாம். மேலும் அனைத்து மகளிரும் சுய மார்பக பரிசோதனை செய்வதை தெரிந்து கொள்வது அவசியம்.

மார்பகத் தோல் மற்றும் மார்பகக் காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள்,மார்பகத்தில் உருண்டையான கட்டிகள் போல காணப்படுதல், மார்பக காம்புகளில் கசிவு போன்றவை காணப்பட்டால் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறவேண்டும்.

ஏனெனில் மார்பகப் புற்று, கருப்பை புற்று, கருப்பைவாய் புற்று போன்றவை தற்பொழுது பெண்களிடம் அதிகமாக காணப்படுகின்றன.

இதில் காணப்படும் குறிகுணங்களைப் புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறும்மோது நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம். மேலும் மெனோபாஸ் காலத்திற்கு பிறகு பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

ஏனெனில் மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறைவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து அவை ரத்தக் குழாய்களில் படியும் வாய்ப்புகள் உள்ளது.

எனவே இக்காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி இவற்றுடன் சித்த மருந்துகளான மருதம்பட்டை, வெண்தாமரை, சீரகச் சூரணம் போன்றவற்றை முறையான மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளும்போது அவை இருதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

பெண்கள் தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்தி நிறைவான ஆரோக்கியத்தோடு வாழ்ந்தால் மட்டுமே ஒரு சிறந்த குடும்பம் மற்றும் சமுதாயம் ஏற்படும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!