மனைவி 4 மாத கர்ப்பிணி… பைக்கிலிருந்து தவறி விழுந்த புதுமாப்பிள்ளை பலி!

திருக்கோவிலூர் அருகே உள்ள சடைக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்முருகன்.இவரது மகன் உதயகுமார் (வயது 23). இவருக்கு கடந்த சுமார் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி நந்தினி என்கிற மனைவி உள்ளார். நந்தினி தற்போது 4மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் உதயகுமார் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அங்கு உள்ள பாபா கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் மோட்டார் சைக்கிளில் இருந்து உதயகுமார் தானாகவே தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடினார்

அப்போது அங்கு வந்து அவரது நண்பர் முனியன் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உதயகுமாரை காப்பாற்றி திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். விபத்தகுறித்து தகவல் அறிந்தவுடன் மணலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 6 மாதத்தில் உதயகுமார் இறந்த சம்பவமும், அவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதும் கிராம மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இறந்து போன உதயகுமாரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்வதாக அறிவித்துவிட்டனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!