இளைய மகனின் நிச்சயதார்த்தத்தை எளிமையாக நடத்திய கெளதம் அதானி!

தொழிலதிபர் கெளதம் அதானி தன்னுடைய இளைய மகனுக்கு எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்திமுடித்திருக்கிறார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தன்னுடைய மகன், மகளின் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தத்தை மிகவும் ஆடம்பரமான முறையில் நடத்தினார்.

இந்தத் திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர். ஆனால், தொழிலதிபர் கெளதம் அதானி தன் இளைய மகன் ஜீத் அதானியின் திருமண நிச்சயதார்த்தத்தை மிகவும் எளிய முறையில் நடத்தி முடித்திருக்கிறார்.

அகமதாபாத்தில் நடந்த இந்தத் திருமண நிச்சயதார்த்தத்துக்கு குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அதானி அழைப்பு விடுத்திருந்தார்.

சமீபத்தில் அதானி நிறுவனம் தொடர்பாக வெளியான செய்திகளால் கம்பெனி பங்குகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது.

இதனால் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் அதானி நிறுவனப் பங்குகள் உயர ஆரம்பித்திருக்கிறது.

அரசியல் மட்டத்திலும் தொடரும் சர்ச்சைகளால் அதானி தன்னுடைய மகனின் திருமண நிச்சயதார்த்தத்தை எளிய முறையில் நடத்தி முடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. பிரபல வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவாவுக்கும், ஜீத் அதானிக்குமிடையே திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.

இருவருக்கும் வெளிநாட்டில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு ஜீத் அதானி தன் தந்தையின் அதானி குரூப்பில் சேர்ந்தார். தற்போது இந்தக் குழுமத்தின் நிதிப் பிரிவில் துணைத்தலைவராக இருக்கிறார்.

கெளதம் அதானியின் மூத்த மகன் கரண் அதானி பிரபல வழக்கறிஞரின் மகளைத் திருமணம் செய்திருக்கிறார். அதானி மகன் திருமணத்தில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலர் கலந்துகொள்ளக்கூடும் என்று தெரிகிறது.

ஏற்கெனவே பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் நெருங்கிய நட்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.-News & image Credit: vikatan * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!