3 மணி நேரத்தில் 135 கோயில்களை வரைந்து தஞ்சை மாணவி அசத்தல் முயற்சி!

தஞ்சாவூர் வட்டம் வல்லம் எம்.ஜி.ஆர். நகரில் ஐய்யப்பன் – சசிகலா தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதியின் மகள் யமுனா (19). யமுனா தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு ஃபேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.

சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட யமுனா ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றுள்ளார். இவர் 5ஆம் வகுப்பு படிக்கும்போது, ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார்.

தான் கற்றுதேர்ந்த ஓவியத்தில் உலக சாதனை செய்ய வேண்டும் என்பதே யமுனாவின் லட்சியமாக இருந்துள்ளது. அதற்கான தீவிர பயிற்சியும் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில்தான், யமுனா சர்வதேச மகளிர் தினத்தன்று ஒரு ஏ4 பேப்பரில் வெறும் மூன்று மணி நேரத்தில் 135 கோயில்கள் தோற்றத்தை அச்சு அசலாக வரைந்து சோழன் புக் ஆப் ரெக்கார்ட் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

அதாவது பேனாவை மட்டுமே பயன்படுத்தி தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோயில் உள்ளிட்ட 135 கோயில்களை வரைந்து அசத்தியுள்ளார். அவரின் ஓவியத்தைப் பார்த்து கல்லூரி நிர்வாகம், பொதுமக்கள் என பலரும் பாராட்டியுள்ளனர்.

தனது சாதனை குறித்து யமுனா கூறியதாவது, சிறு வயதில் இருந்தே ஓவியம் வரையப் பழகி வருகிறேன். கடந்த ஒரு மாதமாக, ஏ4 வடிவிலான தாளில், தமிழகத்தில் உள்ள கோயில்களை பென்சில், ரப்பர் இல்லாமல், பேனாவை மட்டுமே பயன்படுத்தி வரைய வேண்டும் என முயற்சி செய்து வரைந்துள்ளேன். அடுத்ததாக ஏ3 வடிவிலான தாளில், இந்தியாவில் உள்ள 300 கோயில்களை வரையப் பயிற்சி எடுத்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.-News & image Credit: dinamaalai * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!