இப்படி சம்பளத்தை குறைத்துக் கொடுத்தால் நாங்க என்ன செய்வது – நடிகர் அப்பு குட்டி வருத்தம்!

தமிழ்த்திரையுலகம் வியாபாரத்திலும், படைப்பு ரீதியாகவும் இன்று பாலிவுட்டிற்கு இணையாக வளர்ந்து நிற்கிறது.

ஒரு பக்கம் தியேட்டர்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஓடிடி தளங்களை நோக்கி திரைப்படத் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த வளர்ச்சியெல்லாம் திரையுலகில் இருக்கும் ஒரு பகுதியினருக்குத்தான் என்பதுதான் கவலைக்குரிய செய்தி. முன்னணி நட்சத்திரங்கள் சம்பளம் கோடிகளில் கொட்டிக்கொடுக்கும் நிலை ஒரு பக்கம், குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகர்கள், துணை நடிகர்கள் குறிப்பாக நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் நடிகர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.

படத்தின் கதையோட்டத்திற்குக் கைகொடுப்பது துணைக் கதாபாத்திரங்கள்தான்.

2 நாள் 10 நாள் என்று இவர்களுக்குச் சம்பள மாகப் பேசப்படுகிறது. கொரோனாவுக்கு முந்தைய சூழலில் இவர்களின் வாழ்க்கை வளமாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் சிறிய நடிகர்களின் சம்பளத்தை ஒரு நாளைக்கு ரூ. 1000, ரூ.3000 வரைக்கும் குறைத்துப் பேசி அவர்களைச் சரிக்கட்டி விடுகிறார்கள்.

அந்த வாய்ப்பை மறுத்தால் அடுத்தப்படத்திற்கு வாய்ப்புக் கிடைக்காது என்பதாலும், வாழ்வாதாரத்திற்கு அந்தத்தொகை பயன்படும் என்பதாலும் நகைச்சுவை நடிகர்கள் சிலர் அதை ஒப்புக்கொள்கிறார்கள்.

இவர்களுக்கான குறைந்த பட்ச சம்பள அளவை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

சமீபத்தில் காமெடி நடிகர் முத்துக்காளை ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் என்று பேசி வெறும் 1500 ரூபாய்க்கு இறுதியாகக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். இதனை வேதனையோடு நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அவர்.

இது பற்றி தேசிய விருது பெற்ற நடிகரான அப்புக்குட்டி பேசும்போது, என்னை மாதிரியான நடிகர்கள் குறைந்த பட்சமான தொகையை ஒரு நாளுக்கு வைத்திருப்பார்கள்.

இது அவர்களின் குடும்பச்சூழலைச் சமாளிப்பதற்கு போதுமானதாக இருக்கும். அவர்களுக்கு வேறு வேலைக்குப் போக முடியாத நிலையில் சினிமாவை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இதையும் குறைத்துக் கொடுத்தால் என்ன செய்வது.

நான் ரூ.1 லட்சம் வாங்குகிறேன். ஆனால் இதுதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காமல் நல்ல கதைகள், பாத்திரத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் இவற்றை வைத்துக் குறைத்துக் கொள்கிறோம். 5 ஆயிரம் ரூபாய்க்கும் 3ஆயிரம் ரூபாய்க்கும் நடிக்கச்சொல்லும்போது தான் வேதனையாக இருக்கிறது என்றார்.

விஜயகாந்த் நடிகர் சங்கத்தில் இருந்த போது இதுபோன்ற சிறிய பாத்திரத்தில் நடிக்கும் கலைஞர்களுக்காகப் பேசி அவர்களுக்குக் கூடுதல் தொகையைப் பெற்றுத்தந்த சம்பவம் நடந்திருக்கிறது.

ஆனால் இப்போது யார் இந்தப் பிரச்சினையைப் பேசுவது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!