தாயின் பிணத்துடன் 2 நாட்கள் தங்கி இருந்த 11 வயது சிறுவன்!

பெங்களூரு யஷ்வந்தபுரம் ஆர்.எம்.சி.யார்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் அன்னம்மா (வயது 45). இவருக்கு 11 வயதில் சூர்யா என்ற மகன் உள்ளான்.

அன்னம்மாவின் கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் காரணமாக கூலி வேலை செய்து தன்னுடைய மகனை அன்னம்மா வளர்த்து வந்தார். அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருந்துள்ளது.

இந்த நிலையில், தன்னுடைய மகனுடன் படுத்து தூங்கிய அன்னம்மா எழுந்திருக்கவில்லை. குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தூங்கும் போதே அன்னம்மா உயிர் இழந்திருந்தார்.

தன்னுடைய தாய் உயிர் இழந்து விட்டது பற்றி தெரியாமலும், அவர் தூங்கி கொண்டு இருப்பதாகவும் சிறுவன் சூர்யா நினைத்து கொண்டு இருந்தான்.

வீட்டில் இருந்த பணத்தை எடுத்து சென்று கடைக்கு போய் உணவு மற்றும் பிற பொருட்களை வாங்கி 2 நாட்களாக சூர்யா சாப்பிட்டு வந்துள்ளான். அதுபோல், கடைக்கு சென்ற போது சூர்யா தந்தையின் நண்பர்கள் சிலர், சிறுவனிடம் பேசியுள்ளனர்.

அப்போது 2 நாட்களாக தாய் பேசுவதில்லை, தூங்கி கொண்டே இருப்பதாக கூறியுள்ளான். இதனால் சந்தேகம் அடைந்தநண்பர்கள் வீட்டுக்கு வந்து பார்த்த போது தான் அன்னம்மா உயிர் இழந்திருந்ததும், 2 நாட்களுக்கு முன்பாகவே உடல் நலக்குறைவால் அவர் மரணம் அடைந்ததும் தெரிந்தது.

பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஆர்.டி.நகர் போலீசார் விரைந்து வந்து அன்னம்மா உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுபற்றி சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய் இறந்தது பற்றி அறியாமல், அவரது பிணத்துடன் சிறுவன் 2 நாட்கள் இருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!