சொன்னதை மயில்சாமி கேட்கல… நொறுங்கிப்போன மனோ பாலா!

நடிகர் மயில்சாமி திடீரென மரணமடைந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பரான மனோபாலா நொறுங்கிப் போயுள்ளார்.

மயில்சாமி

பிரபல நடிகராக மயில்சாமி கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். சிவராத்திரியை முன்னிட்டு சனிக் கிழமை இரவு முழுவதும் கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் சிவ வழிபாடு செய்த மயில்சாமி, அங்கு நடைபெற்ற ட்ரம்ஸ் சிவமணியின் கச்சேரியிலும் பங்கேற்றார். பின்னர் அதிகாலை வீட்டிற்கு வந்த மயில்சாமி, மீண்டும் கோவிலுக்கு புறப்பட்டுள்ளார்.

மயில்சாமி மரணம்

சென்னை சாலிக்கிராமத்தில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்த மயில்சாமி, திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் மயில்சாமி. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக கூறினர்.

மனோ பாலா

அவரது உடலுக்கு ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், எம்எஸ் பாஸ்கர், செந்தில், கோவை சரளா, பார்த்திபன், ஆர்கே செல்வமணி, மன்சூர் அலிகான், வையாபுரி என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் மயில்சாமியின் நெருங்கிய நண்பரான மனோ பாலா தனது நண்பனின் இறுதிச்சடங்கில் பங்கேற்காதது ஏன் என மனம் திறந்து பேசியுள்ளார்.

மாமா மச்சான்

மயில்சாமி சினிமாத்துறையில் அனைத்த நடிகர்களுடனும் நல்ல நட்பை மேற்கொண்டுள்ளார். அது அவரது மரணத்திற்கு வந்த கூட்டத்திலேயே தெரிந்தது. அந்த வகையில் மனோ பாலாவுடன் ரொம்பவே நெருக்கமாக இருந்துள்ளார் மயில்சாமி. இருவரும் சினிமாக்காரர்கள் என்பதை தாண்டி ஒரே ஏரியாவில் வசித்து வந்துள்ளனர். மேலும் இருவரும் மாமா மச்சான் என்றுதான் பேசிக் கொள்வார்களாம். இந்நிலையில் மயில்சாமியை இப்படி கோலத்தில் பார்க்க விரும்பவில்லையாம் மனோ பாலா.

தைரியம் இல்லை

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், தனது நண்பனை அப்படி பார்க்க தனக்கு தைரியம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் மயில்சாமி சாப்பாட்டு பிரியர் என்பதால் தனக்கு பிடித்த உணவுகள் என்றால் நேரம் காலம் பார்க்காமல் சாப்பிடுவாராம். இப்போது வயதாகிவிட்டது இதை எல்லாம் சாப்பிடக்கூடாது, கட்டுப்பாடோடு இரு என்று அறிவுரை சொன்னாலும் அதைபெரிது படுத்தாமல் அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சான் என்று கூறி விடுவாராம் மயில்சாமி.

சாப்பாட்டு பிரியர்

இந்த தகவலை உடைந்து போய் கூறியுள்ள மனோ பாலா, மற்றவர் நலனில் அக்கறை காட்டிய மயில்சாமி தன்னுடைய உடல்நிலையிலும் அக்கறை காட்டியிருந்தால் இன்னும் சில ஆண்டுகள் நம்மோடு வாழ்ந்திருப்பார் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். தீவிர சிவபக்தரான மயில்சாமி மாதா மாதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று விடுவாராம். அதோடு தான் சம்பாதித்த பணத்தில் பெருமளவு ஏழை மக்களுக்கே உதவி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!