நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசையை நான் நிறைவேற்றுவேன் – நடிகர் ரஜினி!

மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மயில்சாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். அவரை 23,24 வயது இருக்கும்போதே எனக்கு தெரியும்.

மிமிக்கிரி ஆர்டிஸ்டா இருந்து அதற்கு பிறகு சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்தார். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு தெரியும்.

அவர் தீவிர எம்.ஜி.ஆரின் ரசிகர், அதைவிட மிகதீவிர சிவனின் பக்தர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம், அப்போது நான் சினிமா துறையை பற்றி அவரிடம் கேட்பேன், அவர் சினிமாவை பற்றி பேசவே மாட்டார். இரண்டு விஷயங்களை பற்றி தான் பேசுவார்.

ஒன்று எம்ஜிஆர் மற்றொன்று சிவன். நாங்கள் இந்த அளவிற்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தும் கூட அதிக படங்கள் நடிக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் திருவண்ணாமலையில் நடக்கக்கூடிய கார்த்திகை தீபத்திற்கு அங்கே சென்றுவிடுவார்.

அங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்துவிட்டு அவர் ஹீரோவாக நடித்து விட்டு வெற்றிகரமாக படம் ஓடுவது போன்று அவர் சந்தோஷப்படுவார். அங்கிருந்து ஒவ்வொரு தடவையும் எனக்கு தொலைப்பேசியில் தொடர்புக் கொள்வார்.

கடைசிமுறை கார்த்திகை தீபத்திற்கு என்னை தொடர்பு கொண்டார், நான் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் எடுக்கமுடியவில்லை. மூன்று முறை தொடர்புக் கொண்டிருக்கிறார் என்னால் எடுக்கவே முடியவில்லை.

அடுத்த முறை என்னை மன்னித்துவிடுங்கள் என்னால் பேச முடியவில்லை என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே மறந்துவிட்டேன், இப்போ அவரே மறைந்துவிட்டார்.

இரண்டு பேர் நகைச்சுவை நடிகர்கள் ஒன்று விவேக் மற்றொன்று மயில்சாமி. இவர்களுடைய இழப்பு சினிமாதுறைக்கு மட்டுமில்லை, அவர்களுடைய நண்பர்களுக்கு மட்டுமில்லை சமூகத்திற்கே பேரிழப்பு.

இரண்டு பேரும் நல்ல சிந்தனைவாதிகள். மயில்சாமியின் இழப்பு தற்செயலாக நடந்தது கிடையாது, சிவனின் கணக்கு. தன்னுடைய தீவிர பக்தனை அவருக்கு உகந்த நாளில் கூட்டி சென்றுவிட்டார்.

அவருடைய குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. அவர்களுடைய வாரிசுகளுக்கு சினிமாதுறையில் நல்ல ஒரு எதிர்காலம் அமைத்து கொடுக்கவேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

நேற்று நடந்த சிவன் கோவில் நிகழ்ச்சியில் ரஜினி பாலபிஷேகம் செய்வதை நான் பார்க்க வேண்டும் என்று மயில்சாமி, டிரம்ஸ் சிவமனியிடம் சொல்லியிருக்கிறார்.

கட்டாயம் சிவமனியிடம் இதைபற்றி பேசிவிட்டு மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன். இவ்வாறு ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!