இங்கிலாந்து ராணி கமிலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார்.

அதனை தொடர்ந்து, இளவரசியாக இருந்து வந்த சார்லசின் மனைவி கமிலா ராணி (குயின் கன்சார்ட்) பட்டம் பெற்றார்.

இந்த நிலையில் மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த சூழலில் ராணி கமிலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

இது குறித்து அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணி கமிலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் செல்லும் அவரது பயணத்தை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அங்கு நடக்கும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்காக ராணி வருத்தம் தெரிவித்தார்” என கூறப்பட்டுள்ளது.

75 வயதான ராணி கமிலா கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார் என்பதும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!