மேடையில் கையை பிடிச்சு இழுத்தியா…? மணமகன் செயலால் நின்று போன திருமணம்!

உத்தர பிரதேசத்தில் பிரோசாபாத் மாவட்டத்தில் காயிர்கார் நகரத்தில் திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. அந்த நகருக்கு உட்பட்ட ரசாயினி என்ற கிராமத்தில் வசித்து வரும் ஆதேஷ் என்பவருக்கும், ஜஸ்ரானா நகரில் ஜஜுமாய் கிராமத்தில் வசித்து வரும் மனோஜ் குமாரி என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக இரு வீட்டாரும் சுறுசுறுப்புடன் இயங்கி கொண்டிருந்தனர். விருந்தினர் இல்லம் ஒன்றில் ஏற்பாடுகள் தயாராகி வந்தன. இந்நிலையில், திருமண ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு விருந்தினர் இல்லம் வந்தடைந்தது.

இரவு உணவு முடிந்த பின்னர், மணமக்கள் இருவரும் மாலை மாற்றி கொள்ளும் நிகழ்ச்சிக்கு தயாரானார்கள். இதற்காக மணமகன் முன்பே மேடைக்கு வந்து சேர்ந்து விட்டார். அலங்காரம் முடிந்து தோழிகள் சூழ, மணமகள் மெல்ல நடை போட்டு மேடைக்கு வந்து உள்ளார்.

அதுவரை அமைதியாக இருந்த மணமகன் ஆதேஷ், சட்டென் மணமகள் கையை பிடித்து சீக்கிரம் வரும்படி இழுத்து உள்ளார். இந்த அவசரத்தில் மணமகள் மேடையில் தவறி விழுந்து விட்டார்.

இதில் மனோஜ் குமாரி ஆத்திரம் அடைந்து உள்ளார். உடனே, இந்த திருமணம் வேண்டாம் என முடிவு செய்து, ரத்து செய்து விட்டார். ஆதேஷின் செயலால் மணமகள் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதனால், மேடையிலேயே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து ஹர்வேந்திர மிஷ்ரா தலைமையிலான ஷிகோகாபாத் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை சரி செய்ய முயன்றனர்.

இரு குடும்பத்தினரும் மணமகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால், தனது முடிவில் மணமகள் உறுதியாக இருந்து விட்டார். திருமணம் செய்ய முடியாது என கூறி விட்டார். இதன்பின்னர், மணமகள் இன்றி ஊர்வலம் திரும்பி சென்றது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!