கவினுக்கு ‘டாடா’ நாயகி எழுதிய எமோஷனல் கடிதம்..!

கவினுக்காக ‘டாடா’ பட நாயகி அபர்ணா தாஸ் எழுதியுள்ள எமோஷனல் கடிதம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ சரவணன் மீனாட்சி‘ தொடரின் மூலம் பிரபலமானவர் கவின்.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

மூன்றாவது சீசனில் கலந்துக்கொண்ட இவருக்கென்று தனியொரு ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் நடிப்பில் ‘லிப்ட்’ என்ற படம் வெளியானது. ஹாரர் த்ரில்லர் படமாக வெளியான ‘லிப்ட்’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில் ‘டாடா’ படம் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப்படத்தை வெளியிட்டுள்ளது.

இன்று வெளியாகியுள்ள ‘டாடா’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அபர்ணா தாஸ் நாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

காதல் காமெடி ஜானரில் அப்பா, மகன் உறவை மையப்படுத்தி இந்தப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ‘டாடா’ பட நாயகி அபர்ணா தாஸ் உணர்ச்சிபூர்வமான கடிதம் ஒன்றை நடிகர் கவினுக்காக எழுதியுள்ளார். அதில், ”எனக்காக எப்பொழுதும் துணை நின்றதற்கு நன்றி கவின். உன்னை ஒரு வருடத்துக்கு மேலாக தெரியும்.

டாடா படத்தை எனக்கு அளித்ததற்கு நன்றி. இந்தப் படத்துக்காக நீ கடினமாக வேலை செய்ததை பார்த்திருக்கிறேன். படத்துக்காக எல்லா துறைகளிலும் நீ வேலை செய்திருக்கிறாய். தவறான விஷயங்களை உடனிருந்து சரி செய்திருக்கிறாய்.

நிறைய பேட்டிகளிலும் மேடைகளிலும் இதனை சொல்ல நினைத்தேன். நீ மட்டும் இல்லையென்றால் இந்தப் படம் சிறிதும் நகர்ந்திருக்காது. எல்லாவற்றுக்கும் நன்றி.

நான் பல பேட்டிகளில் நீ கோபக்காரன் எனத் தெரிவித்தேன். ஆனால் இப்பொழுது சொல்கிறேன், நீ நல்ல விஷயங்களுக்காகவே சண்டையிட்டாய். இந்த அழகான படத்தை உருவாக்கியதற்கும் அதில் என்னையும் சேர்த்து கொண்டதற்கு நன்றி.

நீ சிறந்த மனிதன். நீ சிறந்த நடிகன். எப்பொழுதும் இப்படியே இரு. நீ உயர்ந்த இடத்துக்கு செல்வாய். கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார். நீ என்ன செய்தாலும் அங்கு ஒரு நல்ல தோழியாக நான் உடனிருப்பேன்.

உனக்கு எது நல்லதோ அதனையே தொடர்ந்து செய். நான் எப்பொழுதும் உன் பின்னால் இருப்பேன். என்று உணர்வுபூர்வமாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!