குழந்தை பிறந்ததாக கணவர் குடும்பத்தினரிடம் நாடகமாடிய இளம் பெண்!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வரும் மூர்த்தியின் மனைவி உமா மகேஸ்வரி வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக தாயுடன் வந்து சேர்ந்துள்ளார்.

அங்கு தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருப்பதால் இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என எடுத்துச் சென்றதாகவும் அந்த இளம்பெண் கூறியுள்ளார்.

பிரசவத்திற்குப் பின் மருத்துவமனைக்கு வெளியே தான் சென்றபோது குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு, தனக்கு குழந்தை பிறக்கவில்லை என ஏமாற்றுவதாக கூறி சத்தம் போட்டுள்ளார்.

இதனால் உமா மகேஸ்வரியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தனக்கு பிறந்த குழந்தை என கணவர் மற்றும் உறவினர்களுக்கு உமா மகேஸ்வரி வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஒரு குழந்தையின் புகைப்படத்தைக் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உமா மகேஸ்வரி தங்கள் மருத்துவமனைக்கு வந்ததே இல்லை என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் இளம்பெண்ணை கர்ப்பமானதற்கான அறிகுறியே இல்லை என்பதும், கணவர் குடும்பத்தை நம்ப வைப்பதற்காக அவர் நாடகமாடியதும் தெரிய வந்தது.

தங்களை நம்ப வைக்க இளம்பெண் நடத்திய நாடகத்தால் கணவர் வீட்டார் ஆவேசத்துடன் கலைந்து சென்றனர். குழந்தை நாடகம் ஆடிய அந்த பெண்ணையும் அவரது தாயையும் போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!