118 வயதில் உயிர் பிரிந்தது…. உலகின் வயதான பெண் மரணம்!

உலகின் வயதான நபரான பிரான்சை சேர்ந்த கன்னியாஸ்திரியான லூசில் ராண்டன் தனது 118 வயதில் மரணம் அடைந்தார். இவர் 1904-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந்தேதி தெற்கு பிரான்சில் உள்ள அலெஸ் நகரில் பிறந்தார்.

லூசில் ராண்டன் மரணம் தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் டேவிட் டவெல்லா கூறும்போது, டூலோனில் உள்ள முதியோர் இல்லத்தில் லூசில் ராண்டன் தங்கி இருந்தார். அவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது. இது பெரும் சோகம்.

ஆனால் தன் அன்பு தம்பியுடன் சேர வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது என்றார். கடந்த ஆண்டு 119 வயதான ஜப்பானின் கேன் டனாசா இறந்தார். அதன்பின் உலகின் வயதான நபராக லூசில் ராண்டன் இருந்தார்.

இவர் தனது 19 வயதில் கத்தோலிக்க மதத்திற்கு மாறினார். பின்னர் 8 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாஸ்திரி ஆனார். சகோதரி ஆண்ட்ரே என்று அழைக்கப்பட்ட லூசில் ராண்டன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப்போரின் பெரும் பகுதியில் குழந்தைகளை கவனித்து கொண்டார். போர் முடிந்த பிறகு ஒரு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய அவர் 28 ஆண்டுகள் அனாதைகள் மற்றும் முதியவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.

கடந்த 2020ம் ஆண்டு லூசில் ராண்டன், வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, “நான் எப்படி இவ்வளவு காலம் வாழ்ந்தேன் என்று தெரியவில்லை. ரகசியம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. அந்த கேள்விக்கு கடவுளால் மட்டுமே பதில் அளிக்க முடியும்” என்று கூறியிருந்தார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!