இளைஞர்களிடம் திருமண ஆசை காட்டி பணம் பறித்த இளம்பெண்- காதலனுடன் அதிரடி கைது

ஆந்திராவில் சமூக வலைதளங்களில் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து, இளைஞர்களுக்கு காதல் வலைவிரித்த இளம்பெண் திருமணம் செய்வதாக ஆசை காட்டி பணம் பறித்துள்ளார்.

இதையடுத்து காதலனுடன் இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், கித்தலூரை சேர்ந்த 27 வயது இளம்பெண் பராசா தனுஸ்ரீ, அதேபகுதியை சேர்ந்தவர் பரசா ரவி தேஜா.

காதலர்களான இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இருவரும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்க திட்டமிட்டனர்.

இதற்காக சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி இளைஞர்களை கவர முடிவு செய்தனர். தனுஸ்ரீ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் நான்கு கணக்குகளை திறந்து அதில் அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

இதில் குறுகிய காலத்தில் அவரின் புரோபைலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதில் கம்மென்ட் செய்பவர்களில் சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு பதில் அளித்து போன் நம்பரை பெற்று கொண்டு இனிமையான வார்த்தைகளால் பேசி, காதல் வலை விரித்துள்ளார். அவரது காதல் வலையில் விழுந்ததும் திருமணம் செய்து கொள்வதாக கூறி நம்ப வைத்துள்ளார்.

பின்னர் தனது தாயின் உடல்நிலை சரியில்லை, வீட்டுக்கடனின் தவனை கட்ட வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களை கூறி செலவுக்கு பணம் கேட்டு 8 மாதங்களில் ₹31.66 லட்சத்தை இளைஞர்களிடம் பெற்றுள்ளார்.

ஒரு நாள் தனுஸ்ரீயிடம் தெலங்கானாவை சேர்ந்த இளைஞர் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். சில நாட்கள் காத்திருந்தும் தனுஸ்ரீயிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ராச்சகொண்டா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தனுஸ்ரீ அவரது காதலன் ரவிதேஜா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குற்றவாளிகளிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் இருவரும் இதுவரை பல இளைஞர்களை ஏமாற்றி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே மெடிப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ராச்சகொண்டா சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பி.ராஜூ தெரிவித்தார்.-News & image Credit: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!