தீபிகா படுகோன் 30 நொடியில் செய்துவிட்டார்.. நக்கலடிக்கும் கஸ்தூரி!

தீபிகா படுகோனின் பதான் பட பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ள நிலையில் நடிகை கஸ்தூரி அதுகுறித்து நக்கலாக டிவிட்டியுள்ளார்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், பாலிவுட் கிங் ஷாரூக்கான் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம் பதான். இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘பேஷ்ரம் ரங்’ பாடல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு யூட்யூப்பில் வெளியானது. இந்தப் பாடலில் நடிகை தீபிகா படுகோன் நீச்சல் உடையில் உச்சக்கட்ட கிளாமரில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.

காவி நிற உடையில்

இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களில் 34 மில்லியனுக்கும் மேல் வியூஸ்களை குவித்துள்ளது பதான் படத்தில் இடம் பெற்றுள்ள பேஷ்ரம் ரங் பாடல். இந்நிலையில் இப்பாடல் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இப்பாடலில் நடிகை தீபிகா படுகோன் காவி நிறத்தில் கவர்ச்சியான உடை அணிந்துள்ளார். இப்பாடலில் இடம் பெற்றுள்ள பேஷ் ரங் என்ற வார்த்தைக்கு வெட்கமற்ற நிறம் என்றும் அர்த்தமாம்.

பதான் படத்திற்கு எதிர்ப்பு

இந்நிலையில் இப்பாடலை பார்த்தவர்கள் தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கானின் நடனம் ஆபாசமாக இருப்பதாகவும் காவி நிறத்தை அவமதிக்கும் வகையில் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளனது. இந்துக்கள் மனதை புண்படுத்தவே இந்த பாடலை உருவாக்கியிருக்கிறார்கள் என்றும் நெட்டிசன்கள் சமூக வலை தளங்களில் கொதித்து வருகின்றனர். மேலும் பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அமைச்சர் எச்சரிக்கை

அரசியல் தலைவர்களும் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய பிரதேச அமைச்சரான நரோட்டம் மிஸ்ரா, இந்துக்களின் புனித நிறமான காவியை ஷாருக்கான் கொச்சைப்படுத்தி விட்டார் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதை இப்படியே அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார் நரோட்டம் மிஸ்ரா. மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை திருத்தவில்லை என்றால் பதான் படத்தை திரையிட அனுமதி மறுக்கப்படும் என்றும் மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

கஸ்தூரி ஆதரவு

பதான் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் அதுகுறித்து நக்கலடித்துள்ளார் நடிகை கஸ்தூரி. இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நரோட்டம் மிஸ்ரா போன்ற அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுபடுவதை, நடிகை தீபிகா படுகோன் ஒரு பாடலின் மூலம் 30 நொடிகளில் செய்துள்ளார். அவர் காவி நிறத்தை இந்தியாவின் விருப்பமான நிறமாக மாற்றியுள்ளார் என பதிவிட்டுள்ளார்.

முதல் முறை அல்ல

மேலும் #morepowertoyou என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் டிவிட்டர் ஹேண்டில்களையும் பதிவிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளது. தீபிகா படுகோனின் படம் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவரது நடிப்பில் உருவான பத்மாவதி திரைப்படம் பெரும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!