ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளிநாடுகளுக்கு விற்று சொகுசு வாழ்க்கை… நபர் சிக்கியது எப்படி?

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பூமாலைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (44). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

சொந்த ஊர் திரும்பிய பிறகு திருப்பூரில் துணிகளை வாங்கி பிசினஸ் செய்து வந்திருக்கிறார். இவர் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பல வெப்சைட்டுகளுக்கு அனுப்பி, அதன்மூலமாக லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கிறது. அதையடுத்து அதுகுறித்தான தகவல்களை சிபிஐ-க்கு மத்திய உளவுப்பிரிவினர் அனுப்பி வைத்திருக்கின்றனர்.

மேலும், ராஜாவினுடைய செயல்பாடுகள் மற்றும் அவர் பதிவேற்றம் செய்துள்ள வெப்சைட்டுகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

இதற்கிடையே ராஜா வீட்டில் சோதனை நடத்த அனுமதி கேட்டு சிபிஐ அதிகாரிகள், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பினர். அதற்கு நீதிமன்றமும் அனுமதியளித்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து வந்த 4 சி.பி.ஐ அதிகாரிகள் உட்பட 6 பேர், பூமாலைப்பட்டியிலுள்ள ராஜா வீட்டுக்கு வந்து சோதனையில் இறங்கினர். ராஜாவினுடைய செல்போன், லேப்டாப் மற்றும் எலெக்ட்ரிக் சாதனங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

அப்போது இளம் சிறார்களின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி லட்சக்கணக்கில் ராஜா பணம் சம்பாதித்து தெரிய வந்தது அதையடுத்து இந்த ஆபாசப் படங்களையெல்லாம் ராஜா எங்கிருந்து பெற்றார், யார் யாருக்கெல்லாம் அந்த ஆபாசப் படங்களை அனுப்பியிருக்கிறார், அவருடைய பின்னணியில் வேறு யாரெல்லாம் இருக்கின்றனர் என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டில் வேலை பார்த்த போது ஏற்பட்ட தொடர்பை வைத்து இளம் சிறார்களின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, அதன்மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து ராஜா சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிந்திருக்கிறது.

மேலும், கடந்த 2 மாதங்களாக கனடா செல்வதற்காக ராஜா ஏற்பாடுகளைச் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சோதனை குறித்து விஷயமறிந்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

“ராஜாவின் தந்தையும் தாயும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். ராஜாவின் தந்தை அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ராஜாவின் மனைவி தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார்.

ராஜாவின் செயல்பாடுகள் எதுவும் அவருடைய குடும்பத்தாருக்கே தெரியாமல் இருந்திருக்கிறது. ராஜா வீட்டில் அதிகாரிகள் ரெய்டுக்கு வந்த விஷயமறிந்து அவர்களது குடும்பத்தினர் அதிர்ந்து போயிருக்கின்றனர். தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணைக்குப் பிறகே மற்ற தகவல்கள் தெரியவரும்” என்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!