உயிரிழந்த பிரியாவின் கடைசி வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்… கண்ணீரில் தோழிகள்!

மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் கடைசி வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைரலாகி வருகிறது.


சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா குறித்த செய்திகள் தான் ஊடகங்களில் ஆக்கிரமித்துள்ளன. தவறான அறுவை சிகிச்சை, இழப்பீடு, மருத்துவர்கள் பணியிடை நீக்கம், உடலை வாங்க மறுத்து போராட்டம் என விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மறுபுறம் பிரியாவின் மரணத்தை பல்வேறு அரசியல் கட்சிகளும் கையிலெடுத்துள்ளன. இவ்வாறு நிலவரம் கலவரமாக மாறி வருகையில், பிரியாவின் கடைசி வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில், ”ஆல் ஃப்ரெண்டஸ் அண்ட் ஃபேமலி… நான் சீக்கிரமே ரெடி ஆயிட்டு கம் பேக் கொடுப்பேன். அதனால் எதுக்கும் ஃபீல் பண்ணாதீங்க. என்னோட மாஸ் என்ட்ரி கொடுப்பேன்.

என்னோட கேம் என்ன விட்டு போகாது. நீங்க நான் திரும்ப வருவேனு நம்பிக்கையா இருக்கீங்க. லவ் யூ ஃப்ரண்டஸ் அண்ட் ஃபேமலி” எனத் தெரிவித்துள்ளார். இதன் ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் அவரது தோழிகள் மற்றும் குடும்பத்தினருக்கு மிகவும் உருக்கமான செய்தியாக மாறியிருக்கிறது.

சம்பவத்தின் பின்னணி:

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயது மகள் பிரியா. இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். தனியார் கல்லூரி ஒன்றில் பட்டப் படிப்பு வந்த சூழலில், தனது கால்பந்து மீதான ஆர்வத்திற்கும் தீனி போட்டு வந்துள்ளார். சிறுவயது முதலே கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் இருந்ததால் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தி வந்தார்.

இதற்கு பலனாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் ஓடிவந்தன. இந்த சூழலில் பிரியா மூட்டு வலி பிரச்சினையால் அவதிக்கு ஆளாகினார். இதையொட்டி சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது, வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அதன்படி உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அறுவை சிகிச்சை செய்தால் மூட்டு வலி குணமாகி விடும். மீண்டும் கால்பந்து விளையாடலாம் என்ற கனவில் இருந்தார் பிரியா. ஆனால் சிகிச்சைக்கு பின்னர் கால் வீக்கம் ஏற்பட்டது. மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டது கண்டறியப்பட்டது. இதனால் அவர் கால் வீங்கியதும் தெரியவந்தது. இப்படியே போனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி வலது கால் அகற்றப்பட்டது. அதன்பிறகு தொடர் சிகிச்சையில் இருந்த பிரியா, இன்று காலை திடீரென உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் தோழிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!