நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 250 பவுன் நகைகள், பணம் கொள்ளை..!

எல்லாம் அவன் செயல் பட நடிகர் ஆர்கேவின் மனைவியை கட்டிப்போட்டு 250 பவுன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் ‘எல்லாம் அவன் செயல்’, ‘அவன் இவன்’, ‘அழகர் மலை’ ஜில்லா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ராதாகிருஷ்ணா (எ) ஆர். கே. 63 வயதான ஆர்கேவுக்கு 53 வயதில் ராஜி என்ற மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்தனர்.

மனைவியை கட்டிப்போட்டு

இந்நிலையில், ராதாகிருஷ்ணா நேற்று வெளியில் சென்றிருந்த நிலையில் மனைவி ராஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மூன்று பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி ராஜியை கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டி உள்ளனர்.

250 பவுன் நகைகள்

இதையடுத்து வீட்டின் பீரோவில் இருந்த 250 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

10 தனிப்படைகள்

மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நடிகர் ஆர்கே வீட்டில் 10 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பார்த்து வந்த ரமேஷ் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 10 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!