இந்தியா தப்பிய குற்றவாளி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5¼ கோடி பரிசு – ஆஸ்திரேலிய போலீஸ் அதிரடி!

கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5¼ கோடி பரிசு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய போலீஸ் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாங்கட்டி கடற்கரையில் தனது நாயுடன் நடைபயிற்சி சென்ற டோயா கார்டிங்லி ( வயது 24) என்ற பெண் கொலை செய்யப்பட்டார். 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த இந்தக் கொலையை, ஆஸ்திரேலியாவில் இன்னிஸ்பெயில் என்ற இடத்தில் ஆண் நர்சாக வேலை செய்த ராஜ்விந்தர் கிங் (38) என்பவர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் இவர், கொலை நடந்த மறுநாளில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை ஆஸ்திரேலியாவில் விட்டு விட்டு இந்தியாவுக்கு தப்பிவிட்டார். இது உறுதியாகி உள்ளது. இவரை 4 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய போலீஸ் தேடுகிறது. ஆனால் இன்னும் சிக்கவில்லை. இந்த நிலையில், இவரை கைது செய்வதற்கு துப்பு தந்து உதவுபவருக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் ரொக்கப்பரிசை (சுமார் ரூ.5¼ கோடி) வழங்குவதாக குயின்ஸ்லாந்து போலீசார் அறிவித்துள்ளனர்.

இது அங்கு அறிவிக்கப்பட்டுள்ள மிக உயர்ந்த சன்மானம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துப்பு பற்றி தகவல் அளிக்க குயின்ஸ் லேண்ட் போலீஸ் ஒரு வாட்ஸ்அப் இணைப்பை உருவாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறைக்கு +911141220972 என்ற எண்ணில் அழைக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!