கர்ப்பிணி மரணத்தில் வெளி வந்த அதிர்ச்சித் தகவல்… சிக்கிய முன்னாள் காதலன்!

கர்ப்பிணியான பிருந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரின் குரல்வளை நெரிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உஷாரான போலீஸார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.


ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகிலுள்ள ராயபாளையம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் (26). இவரின் மனைவி பிருந்தா (24). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்தக் காதல் திருமணத்துக்கு பிருந்தாவின் தாயார் ஆதரவு தெரிவித்த நிலையில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்திவந்தனர்.


இந்நிலையில் கர்ப்பமான பிருந்தா, வயிற்றில் நான்கு மாதக் குழந்தையுடன் கடந்த 27-ம் தேதி வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். பிருந்தாவின் கணவர் கார்த்திக் வெளியூருக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த தன் மகள் உயிரிழந்திருப்பது சந்தேகமளிப்பதாக சித்தோடு காவல் நிலையத்தில் பிருந்தாவின் தாயார் புகாரளித்தார்.


அதன்பேரில் சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து ஈரோடு கோட்டாட்சியர் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


முதற்கட்டமாக பிருந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையைப் பார்த்தபோது, அவரது குரல்வளை நெரிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உஷாரான போலீஸார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

விசாரணையின் முடிவில் பிருந்தாவைக் கொலைசெய்தது அவரின் ஆண் நண்பரான திண்டுக்கல்லைச் சேர்ந்த அரவிந்த் (24) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அரவிந்த்தைக் கைதுசெய்தனர்.


அரவிந்திடம் விசாரணை நடத்திய போலீஸார், கொலை நடைபெற்றதற்கான பின்னணி குறித்துக் கூறியதாவது,
“முன்பு திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துவந்த பிருந்தா, கார்த்திக்கைக் காதலித்து திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே அரவிந்த்தைக் காதலித்துவந்தார்.

அப்போது அரவிந்துக்கு வயது 19. பிருந்தாவுக்கு 21 வயது. இருவரும் திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டைவிட்டு வெளியேறி வெளியூருக்குச் சென்றுவிட்டனர். இதையறிந்த அரவிந்த், பிருந்தா ஆகியோரின் இரு வீீட்டாரும் அவர்களைத் தேடிப்பிடித்து ஊருக்கு அழைத்து வந்தனர்.


`இருவருக்கும் சிறு வயதாக இருப்பதால் கொஞ்சம் நாள் பொறுங்கள். நாங்களே திருமணம் செய்துவைக்கிறோம்’ என்று கூறி இருவரையும் பிரித்து வைத்தனராம். அரவிந்த்தைக் காதலித்த அதேசமயம் திண்டுக்கல்லைச் சேர்ந்த கார்த்திக்கையும் பிருந்தா காதலித்துவந்தாராம்.

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கார்த்திக்கை காதல் திருமணம் செய்துகொண்டு தன் தாயார் வீடான நசியனூருக்கு பிருந்தா வந்துவிட்டார். இவர்கள் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்த பிருந்தாவின் தாயார், அவர்களை ராயபாளையத்தில் தனிக்குடித்தனம் வைத்தார்.

கார்த்திக்கைத் திருமணம் செய்துகொண்டபோதிலும், தன்னுடைய பழைய காதலனான அரவிந்த்துடனும் தொடர்பில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அடிக்கடி அரவிந்த்துடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

இதை அறிந்த கார்த்திக், பிருந்தாவை அவ்வப்போது கண்டித்ததுடன், `அரவிந்த்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதே’ எனக் கூறி பிருந்தாவை எச்சரித்ததுடன், அடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.

இருப்பினும் அரவிந்த்துடன் இருந்த தொடர்பை பிருந்தா விடவில்லை எனக் கூறப்படுகிறது. கார்த்திக் வெளியூர் செல்லும்போது, அரவிந்த் பிருந்தா வீட்டுக்கு வருவதும், இருவரும் தனிமையில் இருந்துவந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிருந்தா கர்ப்பமானார்.

இதற்கிடையே திண்டுக்கல்லில் இருக்கும் தன் அக்கா மகள் காதுகுத்து விழாவுக்கு செல்வதாகக் கூறி கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு காலையிலேயே கார்த்திக் கிளம்பிச் சென்றார்.

அதற்கு முன்னதாகவே, அரவிந்த்துக்கு போன் செய்த பிருந்தா, `கார்த்திக் திண்டுக்கல் செல்வதால் நீ ஈரோட்டுக்கு வந்து விடு’ எனக் கூறி அழைப்பு விடுத்தார். இதனால் காலை 7 மணிக்கு ஈரோடு பஸ் ஸ்டாண்டிலிருந்து கார்த்திக் கிளம்பிச் செல்ல, அதேநாளில் காலை 8 மணிக்கெல்லாம் ஈரோடு வந்து சேர்ந்திருக்கிறார் அரவிந்த்.

நசியனூர் ராயபாளையத்திலுள்ள பிருந்தாவின் வீட்டுக்குக் காலை 8:30 மணி வாக்கில் சென்ற அரவிந்த்தும் பிருந்தாவும் தனிமையில் இருந்துள்ளனர். பின்னர், முட்டை பிரியாணி சமைத்து இருவரும் சாப்பிட்டனர். அப்போது பிருந்தா அரவிந்த்திடம், `என்னை இங்கிருந்து அழைத்துப் போய்விடு. நம் உறவைக் கூறி கார்த்திக் அசிங்கப்படுத்திப் பேசுவதுடன் அடித்து துன்புறுத்துகிறார். அவருடன் வாழ எனக்கு விருப்பம் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.

அப்போது, திண்டுக்கல்லிலிருந்து பிருந்தாவை செல்போனில் அழைத்த கார்த்திக், தான் திண்டுக்கல்லை வந்தடைந்து விட்டதாகக் கூறியுள்ளார். அப்போது கணவருடன் தொடர்ந்து ஒரு மணி நேரம் பிருந்தா சிரித்துச் சிரித்துப் பேசியிருக்கிறார்.


இதனால் அரவிந்த் கடுப்பாகியிருக்கிறார். போன் பேசி முடிந்ததும் தன்னை அழைத்துச் செல்லுமாறு மீண்டும் பிருந்தா அரவிந்த்திடம் கூறியிருக்கிறார். அதற்குக் கோபமடைந்த அரவிந்த், `நீ உன் கணவருடன் சந்தோஷமாகத்தானே இருக்கிறாய். அதுவுமில்லாமல் நீ கர்ப்பமாக இருப்பதால் உன்னை நான் அழைத்துச் செல்ல முடியாது’ என்று கூறினார்.

`என்னை கூட்டிட்டுப் போ. இல்லாவிட்டால் என்னைக் கொன்னுடு, நீயும் என்னோடு இறந்துவிடு’ என்று கூறியிருக்கிறார் பிருந்தா. இருவரிடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தில் பிருந்தாவின் கழுத்தை நெரித்து அரவிந்த் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து அரவிந்த் கைதுசெய்யப்பட்டார். கைதான அரவிந்த்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்” என்று தெரிவித்தனர்.-News & image Credit: vikatan * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!