மனைவியை அடிக்கடி உற்று பார்த்த நபருக்கு நேர்ந்த கதி… கணவரின் வெறிச்செயல்!

மத்திய பிரதேசத்தில் மனைவியை அடிக்கடி உற்று பார்க்கிறார், பின்தொடர்கிறார் என கூறி வாலிபர் மற்றும் அவரது பெற்றோரை கணவர் சுட்டு கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் தேவ்ரான் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெகதீஷ் பட்டேல். இவரது வீட்டுக்கு அண்டை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் மனக் அஹிர்வார்.

இந்த நிலையில், ஜெகதீஷ் மற்றும் மனக் குடும்பத்தினர் இடையே மோதல் வெடித்து உள்ளது. ஜெகதீஷ், தனது மனைவியை மனக் அடிக்கடி உற்று பார்க்கிறார் என்றும் பின்தொடர்ந்து சென்று துன்புறுத்துகிறார் என்றும் கூறி சண்டை போட்டுள்ளார்.

இதனை கவனித்த அக்கம்பக்கத்தில் வசிக்கும் கிராமவாசிகள் தலையிட்டு, சண்டையை தடுத்து நிறுத்தி, சமரசப்படுத்தி வைத்தனர். நேற்று முன்தினம் மாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

எனினும், ஆத்திரம் தீராமல் நேற்று காலை, ஜெகதீஷ் பட்டேல் மற்றும் 5 பேர் ஆயுதங்களுடன் மனக் அஹிர்வாரின் வீட்டுக்கு சென்றனர். அவர்களிடையே மீண்டும் வாக்குவாதம் நடந்து உள்ளது. இந்த முறை மனக், அவரது பெற்றோர் மற்றும் மனக்கின் சகோதரர் மீது ஜெகதீஷ் மற்றும் கூட்டாளிகள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பி சென்றனர்.

இதில், சம்பவ இடத்திலேயே மனக் மற்றும் வயது முதிர்ந்த அவரது பெற்றோர் உயிரிழந்தனர். மனக்கின் சகோதரர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு தெனிவார் கூறும்போது, பட்டேல் குடும்பத்தினரின் பெண் ஒருவர் துன்புறுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. ஜெகதீஷ் பட்டேலை கைது செய்துள்ளோம். மற்ற 5 பேரை தேடி வருகிறோம் என கூறியுள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!