‘காப்பி’ அடிப்பதை தடுக்க நூதன முயற்சி… பிலிப்பைன்சில் நடந்த சுவாரசியம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பிகோல் பல்கலைகழகத்தின் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்கள் தேர்வு எழுதும் போது பக்கவாட்டில் பார்க்க முடியாத படி விதவிதமான வடிவங்களில் தொப்பி ஒன்றை அணிந்து இருந்தனர்.

இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இது தொடர்பான முயற்சியை அந்த துறையின் பேராசிரியை மேரி ஜாய் மாண்டேன் ஓர்டிஸ் முன்னெடுக்க வைத்துள்ளார்.

தேர்வின் போது சக மாணவர்களின் பேப்பரை பார்த்து எழுதிவிடக்கூடாது என்பதற்காக மாணவர்களின் தலையில் விதவிதமான தொப்பிகள் அணிந்து தேர்வு எழுத வைக்க பேராசிரியர் திட்டமிட்டுள்ளார்.

இதற்கான தொப்பியை மாணவர்களே தயாரித்து எடுத்து வரவும் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து மாணவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ப விதவிதமாக தொப்பியை எடுத்து வந்துள்ளனர்.

அட்டைப் பெட்டி, முட்டை கூடு போன்ற மறுசுழற்சி செய்யப்படும் பொருள்களைப் பயன்படுத்தி விதவிதமான தொப்பிகளை அணிந்து அவர்கள் தேர்வு எழுதினர்.

தலைக்கவசம் போன்ற தொப்பிகளுடன் மாணவர்கள் தேர்வு எழுதியதை பேராசிரியர் மேரி ஜாய்மாண்டேன் ஓர்டிஸ் தனது சமூக வலைத்தள பக்கதில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!