பள்ளி கேட்டில் ஆசிரியரின் தலையை தொங்கவிட்ட மியான்மர் ராணுவம்!

மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் கைப்பற்றியது.

அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் மீது ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, அந்நாட்டின் மிக்வே மாகாணம் தவுங் மையிட் கிராமத்தை சேர்ந்த 46 வயது பள்ளி ஆசிரியர் சா டுன் மொய்.

இவர் ராணுவ ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியர் சா டுன் மொயை ராணுவத்தினர் நேற்று கைது செய்துள்ளனர். அவரை கடந்த 1 ஆண்டாக மூடப்பட்டுள்ள பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதிக்கு ராணுவத்தினர் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பொதுமக்கள் முன்னிலையில் ஆசிரியர் சா டுன் மொயின் தலையை துண்டித்து ராணுவத்தினர் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர், மொயின் தலையை பள்ளியின் கேட்டில் தொங்கவிட்டு சென்றுள்ளனர். இந்த கொடூர சம்பவம் மியான்மரில் ராணுவ ஆட்சியில் நடைபெறும் கொடூரங்களை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!