கார் ஓட்டுனரால் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

நடிகை மனவா நாயக் மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மனவா நாயக் செல்போன் செயலி மூலம் பதிவு செய்து வாடகை காரில் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டிய ஓட்டுனரிடம் செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டவேண்டாம் என கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து அந்த டிரைவர் காரை இயக்கி போக்குவரத்து விதிகளை மீறி சென்றதால் போக்குவரத்து போலீசார் அந்த காரை மறித்து விசாரித்துள்ளார்.

அப்போது, கார் ஓட்டுனர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நடிகை மனவா நாயக் தலையிட்டு பிரச்சினையை தீர்த்துள்ளார். ஆனால், கார் ஓட்டுனர் நடிகை மனவா மீது கோபப்பட்டு ஆத்திரத்தில் திட்டியுள்ளார். 500 ரூபாய் அபராதம் நீங்கள் கொடுப்பீர்களா? கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நடிகையை மிரட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து நடிகை மனவா, காரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். ஆனால், காரை வேகமாக இயக்கிய ஓட்டுனர் போலீஸ் நிலையத்திற்கு செல்லாமல் வேறு பகுதிக்கு சென்றுள்ளார். இதையடுத்து, வாடகை கார் நிறுவன செயலியில் இது குறித்து நடிகை புகாரை பதிவு செய்துள்ளார்.

உடனடியாக, வாடகை கார் நிறுவன செயலி ஊழியர் ஓட்டுனரை தொடர்புகொண்டு காரை வேகமாக இயக்கவேண்டாம் என கூறியுள்ளார். பின்னர், காரை நிறுத்தும்படி நடிகை மனவா நாயக் ஓட்டுனரிடம் கூறியுள்ளார். ஆனால், காரை நிறுத்தாமல் அவர் மற்றொரு நபரை செல்போனில் அழைத்துள்ளார்.

இதனால், பதற்றமடைந்த நடிகை மனவா காரில் இருந்தவாறு கத்தி கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார். பெண் காரில் இருந்தவாறு உதவி கோரி கூச்சலிடுவதை கண்ட பைக் மற்றும் ஆட்டோவில் சென்ற சிலர் வேகமாக சென்று காரை இடைமறித்து நடிகையை மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுனர் மற்றும் கார் எண்ணை நடிகை மனவா நாயக் தனது பேஸ்புக்கில் மும்பை போலீசை டேக் செய்து பதிவிட்டார். இதனை தொடர்ந்து கார் ஓட்டுனரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!