மனைவியை திருமண நாளில் கொன்ற கணவன்… பகீர் காரணம்!

மயிலாடுதுறையில் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை திருமண நாளன்று கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறையை சேர்ந்தவர் ராயப்பன் மகன் அருள்,49, சில்லறை வியாபாரி. 1997ம் ஆண்டு விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த பொன்னையா மகள் ரேவதி,43, என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். 25 ஆண்டுகள் கடந்த நிலையில் இவர்களது மகன் தீபன்ராஜ்,24, சென்னையில் உள்ள கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

மகள் மகா ரிருத்திகா கல்லூரியில் பயின்று வருகிறார். குடி போதைக்கு அடிமையான அருளுக்கும், அவரது மனைவி ரேவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக ரேவதி கணவரை பிரிந்து விஸ்வநாதபுரத்தில் உள்ள தாய் மல்லிகா வீட்டில் வசித்து வருகிறார்.

மேலும் அவர் மயிலாடுதுறையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் கணக்கராக பணியாற்றி அதில் வரும் வருவாயை கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அருள் தனது திருமண நாளான நேற்று இரவு வேலைகளை முடித்துவிட்டு மாமியார் வீட்டிற்கு சென்று ரேவதியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.


அதற்கு ரேவதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அருள் உடைமைகளை தருவதாக கூறி நள்ளிரவு தனது வீட்டிற்கு ரேவதியை அழைத்து வந்துள்ளார். வழியில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அருள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேவதியை குத்திவிட்டு தப்பிஓடியுள்ளார்.

உயிருக்கு போராடிய நிலையில் அருகில் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் கொலை வழக்கு பதிந்து அருளை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!