மிஸ் இங்கிலாந்து போட்டியில் ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அழகி!

இங்கிலாந்தில் ‘மிஸ் இங்கிலாந்து’ அழகி போட்டி 94 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அங்கு 94-வது ‘மிஸ் இங்கிலாந்து’ அழகி போட்டி நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த போட்டியில் லண்டனை சேர்ந்த 20 வயதான மெலிசா ராவ்ப் என்கிற அழகி ஒப்பனையே (மேக்அப்) இல்லாமல் கலந்து கொண்டு இறுதி சுற்று வரை முன்னேறியுள்ளார்.

மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94 வருட வரலாற்றில், அழகி ஒருவர் ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் மெலிசா ராவ்ப் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கல்லூரியில் அரசியல் படித்து வரும் அவர் அக்டோபர் 17-ந்தேதி நடைபெறும் இறுதி போட்டியில் 40 பெண்களுடன் போட்டியிடுகிறார். அந்த போட்டியிலும் ஒப்பனை இல்லாமல் கலந்து கொள்ள போவதாக அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி மெலிசா ராவ்ப் கூறுகையில், “எனது இயற்கையான உள்ளார்ந்த அழகை வெளிப்படுத்தவும், சமூக வலைத்தளங்களில் அழகு குறித்து முன்வைக்கப்படும் கூற்றுகளை மாற்றவும் போட்டியில் ஒப்பனை இல்லாமல் கலந்து கொண்டேன்.

பல பெண்கள் தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், சமூக அழுத்தம் காரணமாக ஒப்பனை செய்து கொள்கிறார்கள். நமது இயற்கையான தோல் நமக்கு பிடித்திருந்தால் அதை ஒப்பனை என்ற பெயரில் பிறருக்காக மூடி மறைக்க வேண்டாம்” என கூறினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!