அண்ணியை குத்தி கொன்ற கொழுந்தன்.. பதற வைத்த காரணம்!

திட்டக்குடி அருகே இடத்தகராறு காரணமாக அண்ணியை கத்தியால் குத்தி கொலை செய்த கொழுந்தன், போலீசில் சரணடைந்தார்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்,37.

இவரது மனைவி பிரேமலதா,25. வெங்கடேசனுக்கு முருகேசன், ரவி என இரு அண்ணன்களும், காசிநாதன் என்ற தம்பியும் உள்ளனர். இதில் முருகேசன் தனியாகவும், மற்ற மூவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். வீட்டில் போதிய இடவசதி இல்லாததால் காசிநாதனின் மனைவி, குழந்தைகள் அவரது தாய் வீடான சிறுநெசலுார் கிராமத்தில் உள்ளனர்.

மற்றொரு பூர்வீகமான இடத்தில் வீடு கட்டுவதில், காசிநாதன், வெங்கடேசன் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. காசிநாதன், கல்லுார் ஆவட்டி கூட்ரோடு பகுதிக்கு கூலி வேலைக்கு தினசரி செல்வார். தனக்கு வீடு கட்ட தடையாக உள்ளது வெங்கடேசனின் மனைவி பிரேமலதா தான் காரணம் என எண்ணிய காசிநாதன், நேற்று மாலை 6:00 மணியளவில் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.

இருவருக்கும் தகராறு முற்றியதால், ஆத்திரமடைந்த காசிநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேமலதாவின் கழுத்து, முகம், விலா உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக குத்தினார்.சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரேமலதாவை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.பிரேமலதாவை கொலை செய்த காசிநாதன் ,34, கத்தியுடன் ராமநத்தம் போலீசில் சரணடைந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!