கர்ப்பிணிகளுக்கு அதிகளவு உமிழ்நீர் சுரப்பது ஏன் தெரியுமா..? இதனால் ஆபத்தா..?


பெண்கள் கருவுற்றாலே இதற்கு முன் சந்தித்திராத பல்வேறு மாற்றங்களுக்கு அவர்கள் முகங்கொடுக்க நேரிடும். அவற்றுள் மலச்சிக்கல், உடல் வீக்கம் மற்றும் மார்பகங்களில் மாற்றம் என்பன அடிக்கடி பேசப்படும் விடயங்கள்.

இருப்பினும், கர்ப்பகாலத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் தொடர்பில் அதிகம் பேசப்படுவது இல்லை. பேசப்படுவதில்லை என்பதை விட அவற்றை கண்டுகொள்வதில்லை என்று தான் கூறவேண்டும்.

அந்த வகையில், கர்ப்பகாலத்தில் அதிகளவு உமிழ்நீர் சுரப்பதை இதற்கு உதாரணமாகக் கொள்ள முடியும். உமிழ்நீர் அதிகளவாக சுரப்பதை பற்றி சிலர் கேள்வியுறுவது இதுவே முதன்முறையாக இருக்கலாம் எனவும் கூறலாம்.

உமிழ்நீர் என்றால் என்ன?
மனிதர்களின் வாயில் காணப்படும் நீரினால் உருவாக்கப்பட்ட ஒரு திரவமே இந்த உமிழ்நீர். இதில், உண்ணும் உணவுகளை சமிபாடடையச் செய்யத் தேவையான புரோட்டீன்கள் மற்றும் ஏனைய கனியுப்புக்கள் உண்டு. உணவை மென்று விழுங்க, சுவைக்க, பற்கள் மற்றும் பல்ஈறுகளை கிருமிகளிடம் இருற்து பாதுகாக்க இந்த உமிழ்நீர் உதவி புரிகின்றது.


கர்ப்பிணிகளுக்கு அதிக உமிழ்நீர் சுரப்பது ஏன்?
இந்த நிலைமை கர்பிணிகளுக்கு மாத்திரம் அல்லாது ஏனையோருக்கும் ஏற்படலாம். ஆனால் கர்ப்பிணிகளே இந்த நிலைமைக்கு முகங்கொடுக்கும் பிரதான தரப்பினராக இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் பற்றி தெளிவான விளக்கம் ஒன்று இதுவரை கண்டறியப்படாத போதும், பின்வரும் விடயங்கள் முக்கிய காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

ஹோர்மோன்கள்
கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் அனைத்து விதமான மாற்றங்களுக்கும் ஹோர்மோன்கள் மற்றும் ஹோர்மோன்களின் அதிகரித்த செயற்பாடே முதன்மை காரணமாக அமைகிறது.

குமட்டல்
கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவாலே இந்த குமட்டல். நேர காலம் இன்றி இந்த குமட்டல் ஏற்படுவதனால் உணவு உட்கொள்வதில் அதிக சிரமம் ஏற்படும். அத்துடன், அடிக்கடி எச்சில் விழுங்கும் நிலையும் ஏற்படும். இதற்கு ஏற்றாற் போல், உடலில் அதிகளவு உமிழ்நீர் சுரக்கும்.


ஏனைய காரணிகள்
மனிதர்கள் புகையை சுவாசிக்கும் போது, உடலில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகள் அதிகளவான உமிழ்நீரை சுரக்கும். அத்துடன் கவனிக்கப்படாத பற்சிதைவுகளும் உமிழ்நீரை அதிகளவில் சுரக்க வைக்கின்றன. இதனாலேயே கர்ப்பகாலத்தில் பல் வைத்தியரை நாடுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலேயே செய்யக்கூடிய வைத்தியம்
அடிக்கடி நீர் அருந்துவதன் மூலம் இந்த நிலைமைக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கலாம். அத்துடன் மாவுச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும், வாயை சுத்தமாக பேண, அடிக்கடி பல் துலக்குவதோடு துர்நாற்றத்தை போக்கவல்ல ஸ்பிரேக்களையும் பயன்படுத்துவது சிறந்தது. அவ்வப்போது சுவிங்கம் வகைகளையும் மெல்லலாம். – © tamilvoicenews.com | All Rights Reserved

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி