செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய 7 வயது சிறுமி!

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க வந்த போட்சுவானா கிராண்ட் மாஸ்டரை, அங்கு பார்வையாளராக சென்ற அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, செஸ் போட்டியில் வீழ்த்தினார்.

அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்த சரவணன், -அன்புரோஜா தம்பதியின் மகள் ஷர்வானிகா,7. இவர், உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

4 வயது முதலே, செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பெற்றோர், இவரை ஊக்கப்படுத்தியதால், மாநில, தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், ஒடிசாவில் நடந்த, 8 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற ஷர்வானிகா, இந்திய சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதனால், வரும் 25ம் தேதி, இலங்கையில் நடக்க உள்ள ஆசிய அளவிளான செஸ் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்காக விளையாட உள்ளார்.

இந்நிலையில், சென்னையில் நடந்து வரும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க, 7 வயதான ஷர்வானிகாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக, ஷர்வானிகா, தனது குடும்பத்தினருடன் ஒலிம்பியாட் போட்டிகளை பார்வையிட்டார்.

நேற்று முன்தினம், செஸ் போட்டிகளை முடித்து விட்டு, போஸ்வானா நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டிங்க்வென் அங்கிருந்த பார்வையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

நிகழ்ச்சிக்கு வந்து இருந்த பார்வையாளர்களை பார்த்து, ‘என்னுடன் விளையாட யாரும் தயாரா? என்று கிராண்ட் மாஸ்டர் டிங்க்வென் கேட்டார். அப்போது, நான் விளையாட வரட்டுமா? என்று ஷர்வானிகா கேட்டார். உடனே, கிராண்ட் மாஸ்டர் டிங்க்வென், வா மோதி பார்க்கலாம், என்று சிறுமியை அழைத்து விளையாட சொன்னார்.

இருவரும் சில நிமிடங்கள் செஸ் விளையாடினர். இறுதியில் அந்த சிறுமி குறைந்த நகர்த்தல்களில் டிங்க்வென்னை வீழ்த்தினார். இதையடுத்து, சிறுமி ஷர்வானிகாவை, துாக்கிய டிங்க்வென், ‘நீ ரொம்ப சூப்பரா ஆடுற. நல்ல எதிர்காலம் இருக்கு உனக்கு,’ என்று பாராட்டினார்.

இந்தியா சார்பில், செஸ் போட்டியில் பங்கேற்க உள்ள 7 வயது வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, குடும்ப வறுமை தடையாக உள்ளது. இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதே குறிக்கோள், என மழலை மொழியில் சவால் விடும் அவருக்கு, தமிழக முதல்வர் தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். இவரது, அக்கா ரக்சிகாவும் செஸ் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

வீராங்கனை ஷர்வானிகாவை பாராட்டவோ, உதவவோ 80128 09438 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!