போதையில் காதலருடன் தாறுமாறாக காரில் சென்ற நடிகை – விரட்டி பிடித்த மக்கள்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தும்பா பகுதியை சேர்ந்தவர் நடிகை அஸ்வதி பாபு (வயது26). இவர் ஏராளமான மலையாள படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

நேற்று மாலை அஸ்வதி பாபு, தனது காதலன் நவுபலுடன் காரில் கொச்சி குசாட் சந்திப்பு அருகே சாலையில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் சென்ற கார், சாலையில் வந்த மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல அதிவேகத்தில் பாய்ந்து சென்றது.

ஒரு சில மோட்டார் சைக்கிள்கள் மீது உரசியவாறும், தடுப்பு கட்டைகளில் மோதியவாறும், சாலையில் கார் தாறுமாறாக ஓடியது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது கார் உரசி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது. சுதாரித்து எழுந்து கொண்ட வாலிபர், மோட்டார் சைக்கிளில் காரை விரட்டி சென்றார். சில அடி தூரம் விரட்டி சென்று காரை வழிமறித்தார்.

அவருடன் பொதுமக்களும் விரைந்து வந்து காரை மறித்தனர். இதையடுத்து காரில் இருந்து நடிகை அஸ்வதி பாபு, தனது காதலன் நவ்பலுடன் கீழே இறங்கினார். அப்போது 2 பேரும் போதையில் தள்ளாடியபடியே இருந்தனர்.

தங்கள் காரை வழிமறித்ததால் ஆத்திரம் அடைந்த நடிகையின் காதலன் நவுபல் நேராக காரை மறித்தவர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அறிந்த நடிகை அஸ்வதி பாபு உடனே அங்கிருந்து செல்ல முடிவு செய்து தனது காதலனை அழைத்து கொண்டு காரில் ஏறினார்.

பின்னர் 2 பேரும் காரில் அங்கிருந்து தப்பிக்க முயன்று காரை வேகமாக இயக்கினர். அப்போது கார் சாலையை விட்டு கீழே இறங்கிய போது அங்கு கிடந்த கல் டயரில் குத்தியதால் காரின் டயர் வெடித்தது. இதையடுத்து அஸ்வதி பாபுவும், நவுபலும் தப்பித்தால் போதும் என முடிவெடுத்து அங்கிருந்து வேக வேகமாக நடக்க ஆரம்பித்தனர்.

இருப்பினும் பொதுமக்கள் அவர்களை விடாமல் துரத்தி சென்றனர். இதற்கிடையே தகவல் அறிந்து திருக்காக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் வருவதை பார்த்த நடிகை அஸ்வதி பாபு எதுவும் தெரியாதது போல் தனது காதலருடன், அங்கிருந்த கடைக்குள் சென்று பொருட்கள் வாங்குவது போல் பதுங்கி கொண்டார்.

இருப்பினும் போலீசார் அங்கு சென்று கையில் குளிர்பான பாட்டிலுடன் இருந்த நடிகை அஸ்வதி பாபு மற்றும் அவரது காதலன் நவுபலை பிடித்தனர். அப்போது போதையில் இருந்த 2 பேரையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவர்கள் 2 பேரும் போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!