மந்திரிக்கு நெருக்கமான நடிகை வீட்டிலிருந்து மேலும் பணம், நகை மீட்பு!

மந்திரிக்கு நெருக்கமான நடிகை வீட்டிலிருந்து மேலும் ரூ.29 கோடி பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கு வங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக உள்ள பார்த்தா சாட்டர்ஜி, கடந்த 2014 முதல் 2021-ம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டபோது, ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் கடந்த 22-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.

பார்த்தாவின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஆசிரியர் நியமன முறைகேட்டுடன் தொடர்புடையது என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்க துறையினர் கடந்த 23-ம் தேதி மாலை கைது செய்தனர். மந்திரியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து அர்பிதா முகர்ஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்றும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த மேலும் 29 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் 10 லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

அவற்றை எண்ணி முடிக்கவே பல மணி நேரம் எடுத்துக்கொண்டது. அதோடு வீட்டில் இருந்து 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தின் மதிப்பு ரூ.4 கோடியாகும். பறிமுதல் செய்யப்பட்டுள்ள மொத்த பணம் 50 கோடியும் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதில் நடந்த ஊழலில் கிடைத்த பணம் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பணம் அனைத்தையும் அர்பிதா, தான் தொடர்புடைய கம்பெனியில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தார். இதற்காக பணத்தை ஓரிரு நாளில் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டு இருந்ததாக விசாரணையில் அர்பிதா தெரிவித்தார். அதற்குள் அதிகாரிகள் சோதனை நடத்தி பறிமுதல் செய்துவிட்டனர். தொடர்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது மந்த்திரி பார்த்தா சாட்டர்ஜிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!