ஊசி போட்டதும் மயங்கி விழுந்து இறந்த பெண்… அதிர வைத்த காரணம்!

தவளக்குப்பம் அருகே ஊசி போட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து பெண் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

எலும்பு முறிவு

தவளக்குப்பம் நல்லவாடு ரோடு பிள்ளையார் திட்டு பகுதியை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 49). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி கவிதா (45). இவர்களுக்கு கவுதம் (23) என்ற மகனும், மவுலீஸ்வரி (21) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 1½ வருடத்திற்கு முன்பு வீட்டில் இருந்த புல் நறுக்கும் எந்திரத்தில் கவிதா புல் நறுக்கி கொண்டிருந்தார்.

அப்போது அவரது வலது கை மணிக்கட்டு அருகில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து பிளேட் வைத்தனர். 1 வருடம் கழித்து கையில் பொருத்தி இருக்கும் பிளேட்டை எடுக்கவேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கடந்த மார்ச் மாதம் சென்று காண்பித்து மருத்துவ பரிசோதனை முடிந்துள்ளது. மீண்டும் கடந்த 22-ந் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கையில் இருந்த பிளேட் அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 24-ந் தேதி கவிதாவை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

மயங்கி விழுந்தார்

இந்தநிலையில் நேற்று கவிதாவின் கையில் அதிக வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருந்து விற்பனையகத்தில் ஊசி மற்றும் மருந்துகளை வாங்கி வந்து கவிதாவை தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையத்தில் உள்ள தனியார் கிளினிக்கில் காண்பித்தனர். அங்கு ஊசி போட்ட நிலையில் சிறிது நேரத்தில் கவிதா அங்கேயே மயங்கி விழுந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர், உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். அதன்படி அரசு ஆஸ்பத்திரியில் காண்பித்தபோது, அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கவிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தவறான ஊசியால் மரணம்?

இந்தநிலையில் கவிதாவுக்கு போட்டது அறுவை சிகிச்சைக்கு முன் செலுத்தவேண்டிய ஊசி மருந்து இது வலிக்கான ஊசி அல்ல என்று டாக்டர்கள் தெரிவித்ததாக தெரிகிறது. இந்தநிலையில் தவறான ஊசி போட்டதன் காரணமாக பெண் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஊசி போட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!