கபடி விளையாட்டின் போது கபடி வீரருக்கு நடந்த சோகம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 21). கபடி அணி வீரரான இவர் சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம்ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார். நேற்று இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் இவர் கலந்து கொண்டு விளையாடினார்.

அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். கீழே விழுந்ததும் கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தார். உடனே அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!