ஆசிரியருக்குத் தெரிவிக்காமல் வெளியில் சென்ற மாணவனுக்கு ஆசிரியர் செய்த வெறிச் செயல்…!


கரூர் அருகே தனியார் பள்ளியில் பிளஸ்-1 மாணவரை கத்தியால் குத்திய உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் அருகே மணவாடியில் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தை சேர்ந்த ஹாசூதீனின் மகன் ஹரிக்கூர் ரகுமான் (வயது 16) பிளஸ்-1 வகுப்பில் உயிரியியல் பாடப்பிரிவு படித்து வருகிறார்.

சிறந்த விளையாட்டு வீரரான இவர் கிரிக்கெட், ஜூடோ உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இதனால் ஆரம்பம் முதலே அவரது பெற்றோரும், பள்ளியும் ஊக்கம் அளித்து வந்தது.

அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக கரூர் தாந்தோன்றிமலையை சேர்ந்த பன்னீர்செல்வம் (38) பணிபுரிந்து வருகிறார். ரகுமான் உடற்கல்வி ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியில் சென்று பல்வேறு போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். இதனால் உடற்கல்வி ஆசிரியருக்கும், அந்த மாணவனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.


பள்ளியில் படிக்கும் நீ பள்ளிக்காக மட்டுமே விளையாட வேண்டும், வெளியில் சென்று மற்றவர்களுக்காக விளையாடினால் உன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும், பள்ளியை விட்டு நீக்கி விடுவேன் என்றும் உடற்கல்வி ஆசிரியர் மாணவர் ரகுமானை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை வகுப்புகள் முடிந்ததும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர் ஹரிக்கூர் ரகுமான் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அழைத்த உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் மீண்டும் கண்டித்துள்ளார்.

இதில் மாணவருக்கும், உடற்கல்வி ஆசிரியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த மற்ற ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் இருவரையும் விலக்கி சமாதானப்படுத்தினர். ஆனாலும் உடற்கல்வி ஆசிரியர் மாணவரை தாக்குவதில் குறியாக இருந்துள்ளார்.

அந்த சமயம் யாரும் எதிர் பார்க்காத வகையில் ஆத்திரம் அடைந்த உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் தனது மோட்டார் சைக்கிளில் இருந்த கத்தியை எடுத்து வந்து மாணவர் ஹரிக்கூர் ரகுமானை சரமாரியாக குத்தினார். இதில் மாணவருக்கு இடுப்பு மற்றும் மார்பு மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ரத்தம் சொட்ட, சொட்ட நின்ற மாணவரை உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி மாணவர் ரகுமான் கூறுகையில், நான் ஒரு விளையாட்டு வீரர், பல போட்டிகளில் விளையாடி உள்ளேன். உடற்கல்வி ஆசிரியர் பன்னீர் செல்வம் என்மீது கோபம் கொண்டு பெரும்பாலான விளையாட் டுக்களில் என்னை சேர்த்துக் கொள்வது கிடையாது. தொடர்ந்து என்னை புறக்கணித்து வந்தார்.

அவ்வப்போது என்னை அழைத்து வெளியில் சென்று விளையாடக்கூடாது என்று கண்டித்து தகராறு செய்வார். இதுபற்றி நான் பள்ளி நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்துள்ளேன். நான் கத்திக்குத்தில் காயம் அடைந்தபோதும் அதுபற்றி பள்ளி நிர்வாகத்தினர் எனது பெற்றோருக்கு கூட தகவல் தெரிவிக்கவில்லை.

ஆஸ்பத்திரிக்கு வந்த பின்னர் நானேதான் தெரிவித்தேன் என்றார். உடனே மாணவர் ரகுமானின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. ரகுமானை கத்தியால் குத்திய உடற்கல்வி ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.


இதற்கிடையில் தன்னை மாணவர் ஹரிக்கூர் ரகுமான் கத்தியால் குத்தியதாக கூறி கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் சேர்ந்தார். அவருக்கு வலது கையில் லேசான சிராய்ப்புகளும், முகத்தில் லேசான வீக்கமும் இருந்தது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே இன்று காலை ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பிய ஆசிரியர் பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார். அவர் மீது 307 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் மாணவன் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆசிரியர் பன்னீர்செல்வம் மாணவனால் தான் தாக்கப்பட்டாரா? அல்லது தன் மீது காயத்தை அவரே ஏற்படுத்தி கொண்டாரா? என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். ஆசிரியர் ஒருவர் மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதா, பிதா, குரு என்று மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆசிரியர்கள் கல்வி போதிப்பையும், அதன் மூலம் அடையும் மாணவர்களின் முன்னேற்றத்தை கண்டு பாராட்டும் நிலைதான் இதுவரை இருந்து வந்தது. ஆனால் நல்லொழுக்கம் கற்றுத்தர வேண்டிய ஒரு ஆசிரியரே மாணவரை கத்தியால் குத்திய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!